Last Updated : 18 Jan, 2017 02:38 PM

 

Published : 18 Jan 2017 02:38 PM
Last Updated : 18 Jan 2017 02:38 PM

கொசுக்களை ஒழிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகம் முழுவதும் கொசுக்களை ஒழிக்க மாநில அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், கொசு ஒழிப்புப் பணிக்காக மாநிலம் முழுவதும் நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களின் பணி தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ரமேஷ் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கொசு ஒழிப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி வாதிடும்போது, 'மாநிலம் முழுவதும் கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொசு உற்பத்தியாகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மாநிலம் முழுவதும் கொசு உற்பத்தியை தடுக்கும் பணிக்காக 11,550 பேர் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பணியாளருக்கும் 3000 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று கொசு உற்பத்தியை கண்டறிந்து மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'கொசு உற்பத்தி தடுப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் யாரும் வீடு வீடாக சென்று கொசு உற்பத்தியை கண்டறிந்து மருந்து தெளிப்பதில்லை. கொசுவை முழுமையாக ஒழிக்க முடியாதுதான். ஆனால் கொசுவை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கொசுக்களை கட்டுப்படுத்த அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?

இந்த வழக்கு வந்ததில் இருந்து உயர் நீதிமன்ற கிளையில் அடிக்கடி கொசு மருந்து அடிக்கப்படுகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவது தெரிந்து, இன்று காலையில் கொசு மருந்து அடித்தார்கள். எங்களை (நீதிபதிகளை) சுற்றி வர வேண்டியதில்லை, பொதுமக்கள் வாழும் இடங்களில் கொசு மருந்து அடியுங்கள்' எனத் தெரிவித்தனர்.

மனுதாரர் வாதிடும்போது, 'எங்கும் கொசு மருந்து அடிப்பதில்லை. 50 கி.மீட்டர் வேகத்துக்கு புகையை அடித்துவிட்டுச் செல்கின்றனர். வைகையில் கழிவுநீர் செல்கிறது. அங்கு கொசு உற்பத்தியாகிறது. அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொசு உற்பத்தியை தடுக்கவும், கொசுக்களை கட்டுப்படுத்தவும் நவீன தொழில்நுட்ப வசதிகளை அரசு பயன்படுத்தவி்ல்லை' என்றார். அதற்கு வைகையில் கழிவுநீரில் கொசு உற்பத்தியை தடுக்க எண்ணெய் உருண்டைகள் போடப்படுகின்ற என கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

பின்னர், மாநிலம் முழுவதும் கொசு ஒழி்ப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விவரம் கேட்டு மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன. 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x