Published : 14 Aug 2015 02:03 PM
Last Updated : 14 Aug 2015 02:03 PM

குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் மீண்டும் அதே இடம் வழங்கக் கூடாது: தமிழக அரசின் முதன்மைச் செயலர் உத்தரவு

குற்றச்சாட்டு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வில் மீண்டும் அதே இடத்துக்கு இடமாறுதல் செய்யக் கூடாது என்று தமிழக அரசு முதன்மைச் செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி கல்வித்துறை சார்பில், ஆண்டு தோறும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும். இந்த ஆண் டுக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதில் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து அரசின் முதன்மைச் செயலர் சபிதா பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

கலந்தாய்வு 1.6.15 அன்று ஒரு கல்வியாண்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்தவர்கள், இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். இந்த விதிமுறையில் இருந்து நூறு சதவீதம் பார்வையிழந்தவர்கள், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனமுற்றோர், ராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவி, இருதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள், 40 வயதைக் கடந்த முதிர்கன்னியர், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள ஆசிரியர், வாழ்க்கைத்துணை பணிபுரியும் இடத்துக்கு மாறுதல் கோருபவர்கள் ஆகியோருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இருபாலர் பயிலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் பணியிடங்களுக்கு ஆண், பெண் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். குற்றச்சாட்டு காரணமாக மாற்றப்பட்டவர்கள், மீண்டும் அதே இடம் கோரினால் பணிமாறுதலும் அவர்களுக்கு வழங்கக்கூடாது.

இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியாக இருந்தால் புதிய ஆசிரியர் பணியில் சேர்ந்தபின்புதான், மாறுதல் பெற்ற ஆசிரியர் அப்பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். கணவர், மனைவி தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள் என்ற முன்னுரிமையில் இடமாறுதல் பெற்றவர்கள், 3 ஆண்டுகளுக்குப் பிறகே அடுத்த மாறுதல் வழங்க வேண்டும். சிறப்புநிகழ்வாக கணவர் அல்லது மனைவி திடீரென இறந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் மாறுதல் வழங் கலாம்.

அரசு பெண்கள் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறையை ஆண்கள் பள்ளியிலும் கடைப்பிடிக்க வேண்டும். தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லாதநிலையில் ஆண்,பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம்.

இருபாலர் படிக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஆண், பெண் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x