Published : 23 May 2015 07:50 AM
Last Updated : 23 May 2015 07:50 AM
குன்னூரில் 57-வது பழக்காட்சி இன்று தொடங்குகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவர 500 கிலோ திராட்சை கொண்டு காட்டெருமை வடிவமைக்கப்படுகிறது.
நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு, கோத்தகிரியில் காய்கறி காட்சி, கூடலூரில் வாசனை திரவியப் பொருட்கள் காட்சி, உதகையில் ரோஜா காட்சி மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி, இன்றும் நாளையும் நடக்கிறது.
பழக்காட்சிக்காக பூங்காவில் டேலியா, மேரிகோல்டு, சால்வியா, பெடூனியா, பான்சி, லில்லியம்ஸ் உட்பட 50 ரகங்களில் 1.5 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப் பட்டன. இந்த செடிகள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.
பழக்காட்சிக்காக 500 கிலோ திராட்சை பழங்களை கொண்டு காட்டெருமை மற்றும் அதன் குட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பழங்களைக் கொண்ட ரங்கோலி வடிவமைக்கப்படுகிறது.
நுழைவு வாயிலில் பழங்களால் ஆன அலங்கார நுழைவு வாயில், தோட்டக்கலைத் துறை அரங்கம், காட்சி அரங்கங்கள் மற்றும் போட்டி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பழக்காட்சியில், நீலகிரி மாவட்ட த்தின் முக்கிய பழப்பயிர்களான பிளம்ஸ், பீச், பேரி, ஸ்ட்ராபெரி, ஆப்பிள், பெர்சிமன், துரியன், கிரேப் புரூட், லிச்சி, ரம்புட்டான், மங்குஸ்தான், வெல்வெட் ஆப்பிள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும்.
இந்தாண்டு தோட்டக் கலைத்துறை சார்பில் திருநெல் வெலி, திருச்சி, தேனி, கன்னியா குமரி ஆகிய 4 மாவட்டங்களிலிருந்து சமவெளிப் பிரதேச பழங்களைக் கொண்டு காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT