Published : 06 Oct 2016 08:33 AM
Last Updated : 06 Oct 2016 08:33 AM

கிருஷ்ணகிரி அருகே பூரி சாப்பிட்ட 3 பேர் பலி: மாவில் விஷம் கலந்தவர் கைது

கிருஷ்ணகிரி அருகே பூரி சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். முன்விரோதம் காரணமாக பூரி மாவில் விஷம் கலந்த நபரை கைது செய்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு ஜீவா, பூஜா என ஒரு மகன், மகள் உள்ளனர். ஜீவா, நல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்களது வீட்டின் அருகே சுகுமாரின் மாமியார் கோவிந்தம்மாள் வசித்து வருகிறார். கடந்த 3-ம் தேதி இரவு 7 மணியளவில் பாட்டி கோவிந்தம்மாளின் வீட்டுக்கு சென்ற ஜீவா, பூஜா ஆகியோர் தாங்கள் பசியுடன் உள்ளதாக கூறியுள்ளனர். இதையடுத்து கோவிந்தம்மாள், வீட்டில் இருந்த மாவில் பூரி செய்து, குழந்தைகளுக்கும், வீட்டின் அருகே வசிக்கும் முனியப்பன் என்பவருக்கும் கொடுத்துள்ளார்.

பூரியை சாப்பிட்ட குழந்தைகள் இருவருக்கும் நள்ளிரவில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அன்று மதியம் சிகிச்சை பலனின்றி பூஜா உயிரிழந்தார். மேலும், முனியப்பனும் வீட்டில் இறந்துவிட்டார். இதையடுத்து உறவினர்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் பூஜா, முனியப்பன் ஆகியோரது உடல்களை தகனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுவன் ஜீவாவும் உயிரிழந்தார். இதில் சந்தேகமடைந்த சுகுமார், ராயக்கோட்டை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார், ஜீவாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், சிறுவன் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘கோவிந்தம்மாள் மகன் பைரன். இவருக்கும் நல்லூர் பகுதியைச் சேர்ந்த உறவினர் முருகன் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிந்தம்மாளின் வீட்டில் இருந்த மாவில், முருகன் விஷம் கலந்துள்ளார். இந்த மாவில் செய்த பூரியை சாப்பிட்ட ஜீவா, பூஜா மற்றும் முதியவர் முனியப்பன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் முன்னிலையில் சரண் அடைந்த முருகனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x