Published : 06 Oct 2016 12:19 PM
Last Updated : 06 Oct 2016 12:19 PM
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதமநாராயணன். இவர், மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவர்.
கிரிக்கெட் வீரரான இவருக்கு, சிறு வயதில் பொழுதுபோக்காக கிரிக்கெட் மட்டையில் பந்தை தட்டியவாறு இருப்பார். அதுவே பழக்கமாகி நீண்டநேரம் தட்டினார். மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும் இங்குள்ள நண்பர்கள், அவரை உலக சாதனை படைக்க ஊக்கப்படுத்தினர்.
இதையடுத்து, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க ஏற்பாட்டில், மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் மட்டையால் தொடர்ந்து 6.14 மணி நேரம் பந்தை கீழே விழாமல் தட்டி கின்னஸ் சாதனை படைத்தார்.
இதையடுத்து, அவர் டென்னிஸ் மட்டையிலும் பந்தை கீழ விழாமல் தட்டி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிட்டார்.
அதற்காக, கடந்த ஒரு மாதமாக டென்னிஸ் மட்டையில் பந்தை தட்டி பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
நேற்று ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் டென்னிஸ் மட்டையில் பந்தை கீழே விழாமல் தட்டி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டார்.
டென்னிஸ் மட்டையில் பந்தை கீழே விழாமல் தட்டிய கின்னஸ் சாதனை நேரம் 4.08 மணி நேரமாக இருந்தது. அதை முறியடித்து 4.20 மணி நேரம் டென்னிஸ் மட்டையில் பந்தை தட்டி கவுதம நாராயணன் புதிய சாதனை படைத்தார். இந்த வீடியோ பதிவு கின்னஸ் அமைப்பிற்கு விரைவில் அனுப்பப்படுகிறது. அவர்கள், இந்த சாதனையை அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்குவர் எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT