Published : 05 Dec 2015 01:25 PM
Last Updated : 05 Dec 2015 01:25 PM
தமிழகத்தில் அடுத்த இருதினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 26 நாட்கள் உள்ள நிலையில், தமிழகத்தின் அனேக பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்த மழைக்கு காரணமான தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது சற்றே வலு குறைந்துள்ளது.
இது தொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
வட கடலோரம் மற்றும் இலங்கை அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக இலங்கை மற்றும் அதையடுத்த குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. பதிவு செய்த தகவல்கள் அடிப்படையில் மிக அதிகமான மழை, நன்னிலத்தில் 10, பண்ருட்டி, புதுச்சேரியில் 9, கடலூரில் 8, நெய்வேலியில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, தமிழகத்தின் கடலோரம் மற்றும் தெற்கு உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தென் கடலோர மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம். வட கடலோர மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், டிசம்பர் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 9-ம் தேதி ஓரிரு பகுதிகளிலும், 10-ம் தேதி கடலோர ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை அண்ணாபல்கலை, நுங்கம்பாக்கத்தில் 4, விமான நிலையம், தாம்பரம், தரமணியில் 3செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT