Published : 01 Jan 2017 11:23 AM
Last Updated : 01 Jan 2017 11:23 AM

கல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பகுதி நேர பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பி.சுடலைமுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், ‘‘நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த 2008-ம் ஆண்டு கல்வித்தகுதியை மறைத்து நான் வங்கிப் பணியில் சேர்ந்ததாகக் கூறி வங்கி நிர்வாகம் என்னை பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் என்னை பணிநீக்கம் செய்தது சரியானதுதான் என தனி நீதி பதி உத்தரவிட்டுள்ளார். ஆகவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரி யிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

எந்த ஒரு வங்கியோ அல்லது நிறுவனமோ, தங்களது பணியாளர்களை தேர்வு செய்ய தங்களுக்கென தனிப்பட்ட விதிமுறைகளை வகுத்து வைத் துள்ளன. பணியாளர்களின் கல்வித்தகுதியும் அதில் முக்கியமான ஒன்று. குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக அந்த கல்வித் தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டியது அவசியமானது மட்டுமல்ல, சட்டப்படியானதும் கூட. மனுதாரர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பகுதிநேர பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணி்க்கு கடந்த 2008-ல் விண்ணப்பித்துள்ளார். அந்த வேலைக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதியாக இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது எட்டாம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள் விண்ணப் பிக்க வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

அதன்படி, மனுதாரர் தான் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்ற உண்மையை மறைத்து, 5-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாக மாற்றுச் சான் றிதழைக் காட்டி பணிக்கு சேர்ந் துள்ளார்.

அதன்பிறகு வங்கி நிர்வாகம் அதே ஆண்டு பியூன் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு செய்த போது, இதே மனுதாரர் தான் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எனக்கூறி அந்த பணிக்கும் விண்ணப்பித்துள்ளார். வங்கி நிர்வாகம் உண்மையைக் கண்டு பிடித்து அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

நடத்தை விதிமீறல்

மனுதாரர் உண்மையை மறைத்து பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணிக்கு சேர்ந்ததால் அந்த பணியிடம் உரிய நபர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அரசு அல்லது வங்கி பணிகளில் உண்மையை மறைப்பது என்பது நடத்தை விதிமீறல்தான்.

எனவே மனு தாரரை பணி நீக்கம் செய்தது சரியானதுதான். தனி நீதிபதி சரியான உத்தரவைத்தான் பிறப் பித்துள்ளார் என்பதால் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x