Published : 05 Oct 2013 05:02 PM
Last Updated : 05 Oct 2013 05:02 PM

கடல்சார் படிப்பு பயிலும் மீனவ மாணவர்களுக்கு உதவித் தொகை

கடல் சார்ந்த படிப்புகளில் பயிலும் மீனவ மாணாக்கர் ஒவ்வொருவருக்கும் கல்வி உதவித் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க முதலவர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், மீனவர்களின் நலனுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழகத்தில் உள்ள மீனவர்களின் வசதிக்காக அதிக அளவில் மீன் இறங்கு தளம் மற்றும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, தமிழகத்தில் மீன் இறங்கு தளம் மற்றும் மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பதற்கான இடங்களை தெரிவு செய்து, அங்கு நிலவும் சுற்றுச்சூழல் நிலைமை, தொழில்நுட்ப சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை ஆராய்ந்து விரிவான மேலாண்மை திட்ட அறிக்கையை தயார் செய்யவும், இப்பணிக்காக தொழில்நுட்ப ஆலோசகர்களை நியமனம் செய்யவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கென நடப்பாண்டிற்கு ஆதார நிதியாக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் முடசலோடையில் தற்பொழுது உபயோகத்தில் உள்ள மீன் இறங்கு தளம், அதிகரித்து வரும் படகுகளின் எண்ணிக்கையை எதிர் கொள்ளும் வகையில் இல்லை. இந்த மீன் இறங்கு தளம் விரிவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, கடலூர் மாவட்டம் முடசலோடையில் உள்ள மீன் இறங்கு தளத்தை விரிவுப்படுத்த 7 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தில் 225 மீட்டர் நீளம் படகு அணையும் சுவர், வலை பின்னும் கூடம், அலுவலகக் கட்டடம் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இனி வருங்காலத்தில் 100 விசைப் படகுகளும், 400 நாட்டுப் படகுகளும் இந்த மீன் இறங்கு தளத்தில் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும் சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுவதற்கும் வழிவகை ஏற்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழும் மீனவர்கள் அதிக அளவில் சங்கு குளி தொழிலில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பாரம்பரிய முறைப்படி மூச்சினை அடக்கி கடலில் மூழ்கி சங்குகளை எடுத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சில மீனவர்கள் செயற்கை முறை சுவாசக் கருவிகளை கம்ப்ரசர் உதவியுடன் பயன்படுத்தி கடலில் மூழ்கி சங்கு எடுத்து வருகின்றனர். இந்த முறையில் அதிக அளவு நைட்ரஜன் வாயு, மீனவர்களால் உள்ளிழுக்கப்படுவதால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறையின் மூலம் கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு, SCUBA எனப்படும் Self Containned Underwater Breathing Apparatus என்ற உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாப்பாக சங்கு குளித்தொழில் செய்திட SCUBA உபரகணங்களை 75 விழுக்காடு மானிய விலையில் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக, இந்த ஆண்டு இத்திட்டத்திற்காக 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் அவர் ஆணையிட்டுள்ளார். இத்திட்டம் வரும் ஆண்டுகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

மீனவக் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களின் திறனை மேம்பாடு செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டும், கடல்சார் கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், மாலுமியியல் தொடர்பான பட்டயப்படிப்பு, அதாவது Diploma in Nautical Science, கடல் பொறியியல் தொடர்பான பட்டயப்படிப்பு, அதாவது Diploma in Marine Engineering, இளங்கலை மாலுமியியல் பட்டப்படிப்புக்கு முந்தைய ஓராண்டு கால படிப்பான, படகுதள உதவியாளர், அதாவது Deck Cadets One Year Course Leading to Bsc Nautical Science, பட்டயப்படிப்பு பொறியாளருக்கான இரண்டு வருட கடல் பொறியாளர் பயிற்சி படிப்பு, அதாவது Two Year Course of Trainee Marine Engineering Course for Diploma Engineers, இளங்கலை பொறியாளருக்கான ஓராண்டு கடல் பொறியாளர் பயிற்சி படிப்பு, அதாவது One Year Course of Traniee Marine Engineering Course for Graduate Engineers, மூன்று வருட மாலுமியியல் இளங்கலைப் படிப்பு, அதாவது Three Year Course of Bsc Nautical Science ஆகிய கடல் சார்ந்த படிப்புகளில் பயிலும் மீனவ மாணாக்கர் ஒவ்வொருவருக்கும் கல்வி உதவித் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க முதலவர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக இந்த கடல்சார்ந்த படிப்புகளை பயிலும் 100 மீனவ மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கு 87 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ள முதலவர் ஜெயலலிதா, குளச்சலில் மேற்கொள்ளப்பட்டுள்ள மீன் பிடி துறைமுகப் பணி, அங்கு அவ்வப்பொழுது எழும் ராட்சத அலைகளால் தடைப்பட்டுக் கொண்டே இருப்பதால், குளச்சல் கடல் பகுதியில் ஏற்படுகிற புயல், அதிகமான அலை வீச்சு மற்றும் கடல் கொந்தளிப்பு ஆகியவற்றினால் அலை தடுப்புச் சுவர் பாதிப்படையாமலும், துறைமுகத்தில் மணல் சேர்வதை தடுக்கும் பொருட்டும் பல்வேறு ஆய்வுப் பணிகள் புனேயில் அமைந்துள்ள மத்திய நீர் மற்றும் விசை ஆராய்ச்சி நிலையம் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், மேற்கு அலை தடுப்புச் சுவர் 540 மீட்டர் நீளத்திற்கும், கிழக்கு அலை தடுப்புச் சுவர் 230 மீட்டர் நீளத்திற்கும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இங்கு படகு அணையும் சுவர், மீன் ஏலக்கூடம், மண் தூர்வாருதல், படகு பழுதுபார்க்கும் நிலையம் மற்றும் இதர வசதிகளும் செய்யப்படும். இந்த நடவடிக்கைகள் மீன்பிடித் தொழிலுக்கும் மற்றும் மீனவர்களுக்கும் பெரும் அளவில் உதவிகரமாக இருக்கும்' என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x