Published : 16 May 2016 04:38 PM
Last Updated : 16 May 2016 04:38 PM

கச்சத்தீவு புதிய தேவாலயப் பணிகள் சர்ச்சை: இலங்கை கடற்படை விளக்கம்

யாழ்ப்பாணம் திருச்சபையின் சார்பில் கச்சத்தீவில் சுமார் ரூ. 1 கோடியில் கட்டத் துவங்கி இருக்கும் புதிய அந்தோனியார் தேவாலயப் பணிகள் இந்தியாவின் அழுத்தத்தால் நிறுத்தப்படவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

285 ஏக்கரிலான கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.

கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியை சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோனியார் ஆலயம் நிறுவப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம்

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும் மீன்பிடிக்காக பயன்படுத்தி வந்தனர். 08.07.1974 அன்று இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவுக்கு தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை எழுதிக் கொடுத்தார். இந்த கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்குள்ள புனித்அந்தோணியார் கோவில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.

1983 ஆம் முதன்முதலாக இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டு போர் முடிவுற்றப் பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த மே 8 அன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் கச்சத்தீவில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிய அந்தோனியார் தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி, ஆலயத்திற்கான கட்டட வேலைகளை அனைத்தையும் நெடுந்தீவு ஆயர் ஜெயரஞ்சன் மேற்பார்வையில் இலங்கை கடற்படையினரே மேற்கொள்ள உள்ளனர், என அறிவித்தார்.

தொடர்ந்து சனிக்கிழமை கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை இலங்கை அரசு தன்னிச்சையாக இடிக்க முடிவு செய்திருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தமிழக மீனவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இந்தியாவும், இலங்கையும் கூட்டாகச் சேர்ந்து, தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்கு இலங்கை அரசை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

அதன் பின்னர் கச்சத்தீவு தேவாலய கட்டுமானப்பணிகள் இந்தியாவின் அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

இது குறித்து இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளல் கேப்டன் அக்ரம் அலவி திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு, யாழ்ப்பாண திருச்சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கச்சத்தீவிலுள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தை இடித்து புதியதாக தேவாலயப் பணிகள் கட்டும் பணி கடந்த வாரம் கடற்படையினரால் துவங்கப்பட்டு, அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது.

தற்போது கச்சத்தீவு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுவதற்கு வானிலை இடையூறாக உள்ளது.

இதனால் தேவாலய கட்டுமானப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. தேவாலய கட்டுமானப் பணிகள் இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளளது என ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மை அல்ல.

2017ம் ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு முன்னர் புதிய தேவாலயம் முழுமையாக கட்டி முடிக்கப்படும், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x