Published : 06 Oct 2016 08:39 AM
Last Updated : 06 Oct 2016 08:39 AM

இலவச பொருள் வழங்கல் பிரிவில் 830 பணியிடங்கள் கலைப்பு: 254 தகவல் பதிவு அலுவலர்கள் வேலை இழப்பு

தமிழக அரசு இலவச பொருள் விநியோகத்துக்காக சிறப்பு அலுவலர்களை நியமித்திருந்தது. 2006-ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது. இதற்காக 2006-ல் மாவட்டம் வாரியாக துணை ஆட்சியர், உதவியாளர், தகவல் பதிவு அலுவலர்கள், வாகன ஓட்டுநர்கள், தாலுகா அளவில் துணை வட்டாட்சியர், உதவியாளர், தகவல் பதிவு அலுவலர் என மொத்தம் 830 பேர் இந்த பணியை மேற்கொண்டனர்.

தகவல் பதிவாளர்கள், வாகன ஓட்டுநர்கள் தொகுப்பு ஊதியம் பெற்றனர். மற்றவர்கள் வருவாய் உள்ளிட்ட இதர துறைகளில் இருந்து நியமிக்கப்பட்டனர். 10 ஆண்டு களாக ஆண்டுதோறும் இவர்களது பணியிடம் நீட்டிக்கப்பட்டு வந்தது. பயனாளிகள் கணக்கெடுப்பு, இலவச பொருட்கள் விநியோகம், இருப்பு வைப்பது உள்ளிட்ட பணிகளை இந்த அலுவலர்கள் செய்து வந்தனர்.

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இலவச மிக்ஸி, கிரைண் டர், மின்விசிறி வழங்குவதற்காக 830 பேரின் பணியை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து நீட்டித்து வந்தது. 2016 தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் செல்போன், செட்ஆப் பாக்ஸ், பெண்களுக்கு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப் படும் என அறிவித்தது. இந்த பொருட்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்வது, பொருள் விநியோகத்துக்காக 830 பேருக்கு இதே துறையில் பணி நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் தமிழக அரசின் வருவாய்த்துறை செயலர் (பொறுப்பு) ஆர்.வெங்கடேசன், அக்.4-ல் வெளியிட்டுள்ள அரசாணையில், 830 பேரின் பணியிடங்கள் கலைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த பணியை கவவனித்து வரும் வருவாய்த்துறை உள்ளிட்ட இதர துறையினரை அந்தந்த துறைக்கே திருப்பி அனுப்பவும், வாகனங்களையும் உரிய துறையிடம் ஒப்படைக்கவும், மீதமுள்ள இலவச பொருட்களை வட்டாட்சியர்களிடம் ஒப்படைக் கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: 830 பேரின் பணியிடங்களை கலைத்து உத்தரவிட்டதன் மூலம் செல்போன், ஸ்கூட்டர் உள்ளிட்ட இலவச பொருட்களை வழங்க அரசு ஆர்வம் காட்டுமா என்பது சந்தேகமே. மேலும் ஒவ்வொரு தாலுகாவி லும் சராசரியாக 10 ஆயிரம் கிரைண் டர் உள்ளிட்ட இலவச பொருட்கள் உள்ளன. இவற்றை யாருக்கு வழங் குவது என்பதில் குழப்பம் தொடர் கிறது. இந்நிலையில், திடீரென 830 பணியிடங்கள் கலைக்கப்பட்டதால், 11 ஆண்டுகள் தகவல் பதிவு அலுவலர்களாக பணியாற்றிய சுமார் 250-க்கும் அதிகமானோர் வேலை இழந்து தவிக்கின்றனர். ஒரே நேரத்தில் பலர் திரும்புவதால், பதவி உயர்வு உட்பட பல பாதிப்புகள் வருவாய்த்துறையில் ஏற்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x