Published : 25 May 2014 10:09 AM
Last Updated : 25 May 2014 10:09 AM

ஆண்டுதோறும் காணாமல் போகும் 45 ஆயிரம் குழந்தைகள்: இன்று.. காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக தேசியக் குற்றப்பதிவு ஆணையம் தெரிவிக்கின்றது.

காணாமல் போகும் குழந்தை களுக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இட்டன் பாட்ஷ்

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட்டான். இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது.

ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையொட்டி 1983 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மே 25-ம் தேதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார். அன்றிலி ருந்து மே 25-ம் தேதி காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காணாமல் போகும் குழந்தைகள்

இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணா மல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகமும் இருக்கிறது.

காரணம் என்ன?

குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணம் குறித்து சென்னை குழந்தைகள் நலகுழுமத்தின் உறுப்பினர் ஷிலா சார்லஸ் மோகன் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது: குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளது. தற்போது வீட்டில் பெற்றோர்கள் திட்டுவதால் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் சமூக விரோதிகளும் குழந்தைகளைக் கடத்துகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூகநலகல்வி குழுமத் தலைவர் மனோரமா இதுபற்றி கூறுகையில், “காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட் டாலும் அவர்களை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சிரமம் உள்ளது.

பல குழந்தைகள் தாங்கள் எங்கு இருந்தோம் என்பதுகூடத் தெரியாமல் உள்ளனர். மேலும் செவிதிறன் குறைபாடு, பார்வை இழந்த குழந்தைகள் மீட்கப்பட்டா லும் அவர்களை மீண்டும் சொந்த இடங்களுக்குக் கொண்டு சேர்ப்ப தில் பெரும் சிரமம் உள்ளது” என்கிறார்.

செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளைத் தொலைத் தாலோ அல்லது பொது இடங்களில் தனியாக இருப்பதைக் கண்டாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இந்தப் புகாரின் அடிப்படையில் சைல்டு ஹெல்ப்லைன் தொடர்பு கொண்டு குழந்தை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். www.trackthemissingchild.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்களுக்கு கடமை இருப்பது போல் குழந்தைகளைக் கடத்தும் சமூக விரோதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை உருவாக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

டவுசர் போட்டு நிற்பவர் சென்னை எழும்பூர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித் திரிகிறார். வாய் பேச முடியாதவர். மனநலமும் பாதிக்கப்பட்டவர். ஆனால், யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யமாட்டார். அப்பகுதி கடைகளுக்கு இவர் செல்லப்பிள்ளை. இருப்பதைக் கொடுப்பார்கள். தின்றுவிட்டுப் போய்விடுவார். அதே பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் எஸ்.ஐ. சுந்தரமூர்த்தி, அவரது சட்டை பாக்கெட்டில் பணம் வைக்கிறார். 8 வயதில் இப்பகுதிக்கு வந்தவரை எழும்பூர்தான் இன்னும் ஆதரித்துக் கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x