Published : 18 Jan 2017 04:11 PM
Last Updated : 18 Jan 2017 04:11 PM

அலங்காநல்லூரில் தொடரும் மக்கள் போராட்டம்: அரசியல் கட்சியினருக்கு எதிர்ப்பு; ஆர்வலர்களுக்கு வரவேற்பு

பொங்கல் முடிந்தும் அலங்கா நல்லூரில் உள்ளூர் மக்கள், இளைஞர்கள் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. மூன்றாவது நாளாக இரவுகளிலும் நீடிக்கும் போராட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும் பொதுமக்கள் சோர்வடையாமல் செல்போன் டார்ச், மெழுகு வர்த்தி வெளிச் சத்திலும் போராட்டம் தொடர்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூர் கடந்த சில நாளாக ஜல்லிக்கட்டுப் போராட்ட க்களத்திற்கும் பிரபலமாகி வரு கிறது. பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்காததால் சோர்ந்து போகாத உள்ளூர் மக்கள், பொங்கல் முடிந்தால் என்ன இந்த ஆண்டு நடத்தியே தீருவோம், அதற்கு சட்டத் திருத்தம் கொண்டு வந்தே ஆகவேண்டும், வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிட்டே காட்டுவோம் என போராட்டக்களத்தில் குதித்து ள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடந்த இரண்டு நாளாக அலங்காநல்லூர் வாடிவாசல் நோக்கி குவிந்த வண்ணம் இருப்பதால் ஒவ்வொரு நாளும் அலங்காநல்லூர் மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு என ஸ்தம்பித் துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டாக ஜல்லிக்கட்டு நடக்காதநிலையில் பொங்கல் பண்டிகையோடு உள்ளூர் மக்கள், மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போருடைய கோபமும், போராட்ட குணமும் அடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை தாண்டி, ஜல்லிக்கட்டு நடக்கவே செய்யாது என்பதை தெரிந்து இருந்தும், அலங்காநல்லூரில் உள்ளூர் மக்களின் போராட்ட குணம் இன்னமும் குறையவில்லை. சொந்த ஊரின் வீரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் உள்ளூரை தாண்டி உலகளவில் கிடைத்துள்ள பெருமையும், ஆதரவையும் பார்த்து பூரித்துப்போய் உள்ள அலங்காநல்லூர் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் வீடு, வீடாக சென்று ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கைக்குழந்தைகள், சிறுவர் களுடன் பங்கேற்கும் பெண்களின் போராட்டக் குணத்தை கண்டு அதிர்ந்து போய் உள்ள போலீ ஸார் அவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்குகின்றனர். அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், தன்னார்வ அமைப்பினர், நேரடியாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்திற்கு வந்து ஆதரவு தெரிவிப்பதோடு போராட்டத்தில் பங்கேற்றும் வருகின்றனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் வேண்டாம், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மட்டும் போதும், ’’ என கோஷமிட்டு வரு கின்றனர்.

நேற்று இரண்டாவது நாளாக நீடித்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் சரத்குமார், திமுக எம்எல்ஏ-க்கள் மூர்த்தி, பிடிஆர்.பி.தியாகராஜன், அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் மற்றும் மற்ற கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க படையெடுத்தனர். இவர்களில் சீமான், அமீர், ஜி.வி.பிரகாஷ் தவிர மற்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர் சரத்குமார் வந்தபோது, திரும்பி போகும்படி கோஷமிட்டனர். அதிமுக எம்எல்ஏ, திமுக எம்எல் ஏக்களுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். நேற்று இரண்டாவது நாளாக இரவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டும் உள்ளூர் மக்களும், இளைஞர்களும் செல்போன் டார்ச், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

இன்று மூன்றாவது நாள் ஆர்ப்பாட்டம், மறியலுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து மாணவர்களுக்கு ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளதால் மதுரையில் பஸ் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயமும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் சரியான தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாப்பாடு, குடிநீர் இல்லாமல் போலீஸார் தவிப்பு

போராட்டக்களத்தில் பங்கேற்கும் பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கு, இளைஞர்கள், உள்ளூர்காரர்கள் நேரத்திற்கு நேரம் குடிநீர், பிஸ்கட், பார்சல் சாப்பாடு ஏற்பாடு செய்து வழங்குகின்றனர். அதனால், அவர்கள் தடையின்றி போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு பாதுகாப்பாக கடந்த மூன்று நாளாக நிற்கும் போலீஸார், நேரத்திற்கு சாப்பாடு, குடிநீர் கிடைக்காமலும், அவசர உடல் உபாதைகளுக்கு செல்ல முடியாமலும் சோர்வடைந்துள்ளனர். குறிப்பாக பெண்கள், மிகுந்த சோர்வடைந்து போய் உள்ளனர். உயர் அதிகாரிகள் அவர்கள் பற்றி கவலைப்படாமல் அவர்கள் கவனம் முழுவதும் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை சமாளிப்பதிலும், போராட்டக்காரர்களை கண்காணிப்பதிலுமே இருக்கிறது. அலங்காநல்லூரில் இன்னும் போராட்டம் ஓய்ந்தபாடில்லாததால் அங்கு பணிபுரியும் போலீஸாரின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது

அலங்காநல்லூரில் சாலையின் நடுவில் கம்புகளை கொண்டு கட்டியிருந்தநிலையில் போலீஸார் இருவர் அவசரமாக அந்த வழியாக செல்ல முயன்றபோது இளைஞர்கள் அவர்களை செல்ல விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x