Published : 01 Aug 2015 10:35 AM
Last Updated : 01 Aug 2015 10:35 AM

அப்துல் கலாம் பிறந்த நாள்தான் தேசிய மாணவர் தினத்துக்கு சரியான நாள்: 3 முறை கலாம் அழைத்து பாராட்டிய மாணவி உருக்கம்

மாணவர்களை எவ்வித பேதமுமின்றி ஊக்குவிப்பதில் அப்துல் கலாமுக்கு நிகராக வேறு யாரும் இல்லை என்பதால் அவரது பிறந்த நாள்தான் தேசிய மாணவர் தினத்துக்கு மிகப்பொருத்தமான நாளாக இருக்கும் என அவரால் 3 முறை அழைத்து பாராட்டப்பட்ட மாணவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயாவில் 11-ம் வகுப்பு மாணவி லவிணாீ (16). இவரை அப்துல் கலாம் 3 முறை அழைத்து பாராட்டினார். இது குறித்து லவிணாீ கூறியது:

3 வயதிலேயே 1,330 திருக் குறளையும் ஒப்புவிப்பதில் திறமை பெற்றேன். 2004-ல் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் மாணவர்களை ஊக்குவிப்பதை அறிந்து அவரை சந்திக்க ஆவலாக இருப்பதாக கடிதம் அனுப்பினேன்.

2004-ம் ஆண்டில் ராமேசுவரம் வந்த அப்துல் கலாம் என்னை மதுரை விமான நிலையம் வரவழைத்து வாழ்த்தினார். அப்போது எனது கை விரலை பிடித்து உயரே, உயரே தூக்கினார். என்னால் ஒரு அளவுக்கு மேல் தூக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். இதைப் பார்த்த அப்துல் கலாம் முயற்சி மேல் முயற்சி செய்தால்தான் வெற்றி மேல் வெற்றி பெற முடியும் என்றார். இதே எண்ணத்துடன் தொடர் முயற்சியால் திருக்குறள் ஒப்புவித்தலுக்காக 7 வயதில் தேசிய விருதை மத்திய அரசின் குழந்தைகள் வளர்ச்சி நிறுவனம் வழங்கியது. இதையறிந்த அப்துல் கலாம் என்னை குடியரசுத் தலைவர் மாளிகைக்கே அழைத்து வாழ்த்தினார். அப்போதும் முயற்சியால் நடக்காதது ஏதும் இல்லை எனக் கூறியே வாழ்த்தினார்.

2008-ம் ஆண்டு எனது 8-வது வயதில் உலகிலேயே குறைந்த வயதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றேன். இதற்கு முன் இந்நிறுவன தேர்வில் பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது சிறுமி வென்ற சாதனையை முறியடித்தேன்.

இதற்காக 2008-ல் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாராட்டு பெற அழைக்கப்பட்டேன். இதற்காக புதுடெல்லி சென்ற போது, முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் என்னை அழைத்து மீண்டும் பாராட்டினார். அப்போதும் முயற்சித்துக்கொண்டே இருந்தால் சாதனைக்கு எல்லையே இல்லை எனக்கூறி பாராட்டினார்.

அவரிடம் பாராட்டு பெற, பெற எனக்கு மேலும், மேலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவர் மறைந்ததை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர் எப்போதும் ஆசி வழங்குவதைப்போலவே இருக்கிறது. அவரது உடலை பார்க்கும் சக்தி இருப்பதாக கருதாததால், தவிர்த்துவிட்டேன். என்னை முன்னிலைப்படுத்தித்தான் பள்ளியில் அவரது அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்காக உழைத்ததில் அப்துல் கலாமுக்கு நிகர் யாரும் இல்லை. சர்வதேச மாணவர் தினத்திற்கு அவரது பிறந்த நாளைத்தவிர மிகச்சரியாக வேறு எந்த நாளும் இருக்க வாய்ப்பில்லை. இதை அரசு உடனே செய்தால் மாணவர் சமுதாயம் தலைமுறை தலைமுறையாய் வாழ்த்திக்கொண்டே இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x