Published : 06 Oct 2016 07:06 PM
Last Updated : 06 Oct 2016 07:06 PM

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

காவிரி பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக தமிழகத்தில் நிதி அல்லது பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடைசி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது மத்திய அரசின் தமிழர் விரோத போக்கினையே காட்டுகிறது.

தமிழகத்தை வஞ்சிக்கிற மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு முறை தீர்ப்புகளை வழங்கும் போதும், கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி முடிவுகளை எடுக்கிறார். ஆனால், தமிழகத்தில் அத்தகைய நிலை இல்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாததால் அவரை குறை சொல்ல விரும்பவில்லை.

ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டுமென வாழ்த்துகிறேன். அதே நேரத்தில், காவிரி பிரச்சினை தொடர்பாக நிதி அமைச்சரையோ, பொதுப்பணித்துறை அமைச்சரையோ தலைமை வகிக்க வைத்து ஒரு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். அதன் மூலம் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதிமுக அரசு செயல்படாமல் உள்ள காரணத்தால் தான் நாங்கள் தஞ்சையில் நாளை (இன்று) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறோம். தமிழக வாழ்வாதாரங்களை காப்பதில் திமுக என்றைக்கும் பாடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x