Published : 31 Jan 2017 08:50 AM
Last Updated : 31 Jan 2017 08:50 AM

அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை நீடிப்பு: அரசு பதிலளிக்க அவகாசம் அளித்து உத்தரவு

அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப் பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்த தீர்வு காண்பதற்காக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதால் விசாரணை பிப்ரவரி 27-க்கு தள்ளி வைக்கப்பட்டது.

விளை நிலங்களை அங்கீகார மற்ற வீட்டுமனைகளாக மாற்ற தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கொண்ட அமர்வு, விளை நிலங் களை வீட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ல் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற தடையால் தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற வீட்டுமனைகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி மற்றும் தனி வீடுகளை விற்க முடியாமலும், நிலங்களை விற்க முடியாமலும் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியுள்ளதாகக் கூறி பலர் வழக்கு தொடர்ந்தனர்.

அரசாணை

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘‘தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் பிரிவு 22-ஏ-வின்படி அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறது. ஆனால், 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளை மறுபத்திரப்பதிவு செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது’’ என ஓர் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரி விக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தமிழ கத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளது? அங்கீகார மற்ற மனைகளை அரசு எவ்வாறு வரையறை செய்யப் போகிறது என்பதை தெளிவுபடுத்தும் விதமாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ஆஜராகி, ‘‘தலைமைச் செயலாளர் சமீபத்தில் தான் புதிதாக பதவியேற்றுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் அரசின் கருத்தைக் கேட்டு ஒருங்கிணைந்த தீர்வு காணும் வகையில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என கோரினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையே, உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையால் பலர் தங்களது திருமணம் உள்ளிட்ட குடும்ப செலவுகளுக்குக்கூட தேவையான நிதியை திரட்ட முடியவில்லை என்றும் எனவே, அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளில் ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டு மனைகளுக்கு மட்டுமாவது தடையை நீக்க வேண்டும் எனவும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் மீண்டும் பழைய நிலை மைக்கே சென்றுவிடும்.

இது தொடர்பாக அரசு ஒருங்கிணைந்த தீர்வு காண்ப தற்காக அவகாசம் கோரியுள்ளது. அரசு பதில் மனு தாக்கல் செய்தபிறகே இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியும்’’ என கருத்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x