Published : 11 Jul 2019 11:20 AM
Last Updated : 11 Jul 2019 11:20 AM
உலகப் கோப்பை அரை இறுதியில் போராடித் தோற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளனர்.
மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்னில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இதனால் உலகக் கோப்பை போட்டியில் இருந்து இந்தியா வெளியேறிய நிலையில், நியூஸிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ''நேற்றிரவில் கோடிக்கணக்கான இதயங்கள் உடைந்திருந்தாலும் எங்களின் அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியானவர்கள் நீங்கள் (இந்திய அணியினர்). மிகச்சிறந்த போராட்டத்தை மேற்கொண்டீர்கள்.
சிறப்பான வகையில் வெற்றியைச் சம்பாதித்து, உலகக் கோப்பை இறுதியில் இடம் பிடித்த நியுசிலாந்து அணிக்கு எனது வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
இதேபோல இந்தியாவின் ஆட்டம் குறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார். அதில், ''ஏமாற்றத்தை அளிக்கக் கூடிய முடிவு. ஆனாலும் இந்திய அணி, கடைசி நேரம் வரை தொடர்ந்து போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது நன்றாக இருந்தது.
உலகக்கோப்பைப் போட்டித் தொடர் முழுவதும் இந்தியா நன்றாக விளையாடியது. பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்துமே சிறப்பாக இருந்ததை எண்ணிப் பெருமைப்படுகிறோம். வெற்றிகளும் தோல்விகளும் வாழ்க்கையின் ஒரு பகுதியே. இந்திய அணியின் வருங்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT