Last Updated : 08 Jul, 2019 04:44 PM

 

Published : 08 Jul 2019 04:44 PM
Last Updated : 08 Jul 2019 04:44 PM

நாளை அரையிறுதி ஆட்டம்: 16 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவுடன் மோதும் நியூஸி.- வலுவான பேட்டிங்கிற்கு சவாலாகும் பந்துவீச்சு

மான்செஸ்டரில் நாளை நடக்கும் உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள இந்திய அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது வேகப்பந்துவீச்சை முக்கிய அம்சமாகக் கொண்ட நியூஸிலாந்து அணி.

உலகக் கோப்பைப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் முதல் 4 இடங்களைப் பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதில்  9 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் பெற்று இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து 11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்த இரு அணிகளும் நாளை அரையிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

லீக் சுற்றில் இரு அணிகளும் நாட்டிங்ஹாமில் மோதுவதற்கான வாய்ப்பு இருந்தபோது மழையால் போட்டி ரத்தானது.

இந்த சூழலில் 16 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் மீண்டும் மோதலில் ஈடுபடுகின்றன. கடந்த 2003-ம் ஆண்டு கடைசியாக செஞ்சூரியனில் இரு அணிகளும் மோதின, அந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டில் இந்திய அணி வென்றது. அதன்பின் நடந்த 2007, 2011, 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி மோத வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்தகால வரலாற்றைப் பார்த்தால், உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை நியூஸிலாந்து அணியும், இந்திய அணியும் 7 முறை மோதியுள்ளன. இதில் நியூஸிலாந்து 4 முறையும், இந்திய அணி 3 முறையும் வென்றுள்ளன.

ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை இரு அணிகளும் 101 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் நியூஸிலாந்து 44 போட்டிகளிலும், இந்திய அணி 51 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளன. 

இரு அணிகளும் சமபலம் பெற்றுள்ளதாகவே இருக்கின்றன. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூஸிலாந்து பயணம் சென்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் டிரன்ட் போல்ட் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் நிலைகுலைந்து ஆட்டமிழந்தனர். ரவிந்திர ஜடேஜா மட்டுமே நிலைத்து பேட் செய்து அரைசதம் அடித்தார்.

லீக் ஆட்டங்களில் இந்திய அணியின் பேட்டிங்கைப் பார்த்து நியூஸிலாந்து அணியின் எளிதாக எடைபோட்டு விடமாட்டார்கள். ரோஹித் சர்மா 5 சதங்களுடன் 647 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார், 5 அரைசதங்களுடன் கோலி 442 ரன்களுடனும், ராகுல் 360 ரன்களுடன் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அசைக்க முடியாத ஃபார்மில் இருக்கிறார்கள். இவர்கள் 3 பேரும் சேர்ந்து 1,347 ரன்கள் சேர்த்துள்ளார். இவர்களின் பேட்டிங் நிச்சயம் அச்சுறுத்தலாக அமையும்.

அதேசமயம், விராட் கோலி,  ரோஹித் சர்மா, ராகுல் ஆகியோர் இடதுகை வேகப்பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில்  பலவீனமானவர்கள். குறிப்பாக நியூஸிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் பந்துவீச்சு தொடக்க ஆட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

இதுவரை போல்ட் இந்தியாவுக்கு எதிராக 12 போட்டிகளில் ஆடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதிலும் ரோஹித் சர்மா இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அச்சப்பட்டு ஆட்டமிழந்தது பலமுறை தெளிவாகியுள்ளது. ரோஹித் சர்மாவின் 202 இன்னிங்ஸ்களில் 23 முறை இடது கை வேகப்பந்துவீச்சாளர்களின் அவுட் ஸிவிங்கை ஆடமுடியாமல் விக்கெட்டை இழந்துள்ளார். இதில் 3 முறை டக்அவுட் வேறு. இதில் 16 முறை 0 முதல் 20 ரன்களுக்குள் ரோஹித் சர்மா ஆட்டமிழந்துள்ளார். 

ஏனென்றால் அரவுண்ட்(around stick) ஸ்டிக்கில் இருந்து பந்துவீச்சாளர் பந்துவீசும் போது வலதுகை பேட்ஸ்மேன்கள் துல்லியமாக எதிர்கொண்டு விளையாடுவதில் சிரமம் இருக்கும் நல்ல பந்துகளை கவனக்குறைவாகத் தொட்டுவிட்டால் கேட்ச் செல்வது நிச்சயம். 

டிரன்ட் போல்ட் தவிர்த்து, பெர்குஷன், மாட் ஹென்ரி ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். இதில் பெர்குஷன் 150 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர். இவரின் பந்துகளை மிகக் கவனமாகக் கையாளவிட்டால் விக்கெட்டை இழக்க நேரிடும்.  

4-வது இடத்தில் கடந்த போட்டிகளில் களமிறங்கிய ரிஷப் பந்த் செட்டில் ஆகியுள்ளார். அவர் பொறுமையுடன் பேட் செய்வது அவசியம். நியூஸிலாந்து அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால், தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ஆப்ஃஸ்பின்னருக்காக, கேதார் ஜாதவ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

ஒருவேளை கூடுதல் பேட்ஸ்மேன் தேவை என்றால், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு மயங்க் அகர்வாலுக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம்.

குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் இருவரும் சேர்க்கப்பட வாய்ப்புகள் இருந்தாலும், ஆல்ரவுண்டர் தேவை என நினைத்தால் குல்தீப் நீக்கப்படடு ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்படுவார். ஏனென்றால், நியூஸிலாந்து தொடரிலும், பயிற்சி ஆட்டத்திலும் ஜடேஜாவின் பேட்டிங் சிறப்பாக இருந்துள்ளது.

தோனியின் பேட்டிங் கடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விமர்சிக்கப்பட்டாலும், அதன்பின் பேட்டிங்கில் முன்னேற்றம் தெரிகிறது. "சாம்பலில் இருந்து எழுவதைப்போல்", தோனி தன்மீதான விமர்சனங்களுக்கு தனது பேட்டிங்கால் பதில் சொல்வார் என நம்பலாம். ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு பலம்.

பும்ராவின் பந்துவீச்சு நாளை முக்கியத் துருப்புச்சீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை நியூஸிலாந்து தொடருக்கு பும்ரா செல்லவில்லை என்றாலும் அவரின் பந்துவீச்சு நிச்சயம் அச்சுறுத்தலை தரும்.

 8 போட்டிகளில் பும்ரா 17 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி வருகிறார். நாளைஆட்டத்தில் வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தரப்படலாம் என்பதால், முகமது ஷமியுடன், புவனேஷ்வர் குமாரும் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை தொடர்ந்து 3 போட்டிகளாக தோல்வி அடைந்து நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். இது இந்திய அணிக்கு சாதகம் என்றாலும், இழந்த நம்பிக்கையை பெற முயல்வார்கள்.

நியூஸிலாந்து அணியின் பலவீனம் கேப்டன் வில்லியம்ஸன், ராஸ் டெய்லர் இருவரையும் அதிகமாக சார்ந்திருப்பதுதான். நாளை ஆட்டத்தில் இருவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டாலே ஏறககுறைய பாதி வெற்றி கிடைத்ததுபோலத்தான்.

தொடக்க ஆட்டக்காரர்கள் முன்ரோ, கப்தில் இதுவரை எந்த போட்டியிலும் சிறப்பாக பேட் செய்யவில்லை. நாளை தங்களை நிலைநிறுத்த வேண்டியநிலையில் இருக்கிறார்கள். நடுவரிசையில் டாம் லாதம், நீஷம், ஹென்றி, கிராண்ட் ஹோம் ஆகிய பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் நிலைத்து ஆடுவது சந்தேகம் தான்.

ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், சாஹல் இருவரின் பந்துவீச்சை நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் சமாளித்து விளையாட பழகாதவர்கள், அந்த பலவீனத்தை இந்தியா பயன்படுத்தலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நியூஸிலாந்து அணி பேட்டிங்கில் வில்லியம்ஸ்ன், டெய்லரையும அதிகமாகச் சார்ந்துள்ளது. பந்துவீச்சில் டிரன்ட் போல்ட், பெர்குஷன், நீஷம் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். பேட்டிங்கை காட்டிலும் பந்துவீச்சை அதிகம் நம்பி களமிறங்குகிறது.

இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய ஸ்கோரை அடித்து நியூஸிலாந்து பந்துவீசினால்தான் சுருட்டமுடியும். அதேசமயம் பந்துவீச்சில் இந்தியாவின் டாப் ஆர்டரை தொடக்கத்தில் வீழ்த்தினால் ஓரளவுக்கு நம்பிக்கை கிடைக்கும். இல்லாவிட்டால் இந்திய அணியை சாய்ப்பது நியூஸிலாந்து அணிக்கு சுலபமான காரியமல்ல.

இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x