Published : 30 Jun 2019 08:06 PM
Last Updated : 30 Jun 2019 08:06 PM

ரோஹித் சர்மாவுக்கு கையில் வந்த கேட்சை விட்ட ஜோ ரூட்: மேட்சை விட்டாரோ?- ராகுல் டக் அவுட்

எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்தின் 337 ரன்கள் இலக்கை விரட்டி வரும் இந்திய அணி கே.எல்.ராகுலை இழந்து விட்டது, ரோஹித் சர்மாவும் பெவிலியனுக்குத் திரும்பியிருக்க வேண்டியதுதான் ஆனால் 2வது ஸ்லிப்பில் ஜோ ரூட் கையில் வந்த கேட்சை விட்டார். இது மேட்சை விட்ட கேட்ச் ஆகுமா என்பது முடிவில்தான் தெரியவரும்.

 

முதல் ஓவரை வோக்ஸ், ராகுலுக்கு மெய்டனாக வீச, 2வது ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீச முதல் பந்திலேயே அதியற்புதமாக ரோஹித் சர்மா ஆஃப் வாலி பந்தை லாங் ஆஃப் பவுண்டரிக்கு விரட்டினார்.

 

ஆனால் இதே ஓவரின் 4வது பந்து சற்றே வெளியே ஸ்விங் ஆக ட்ரைவ் ஆட முயன்றார் ரோஹித் அது மட்டையின் விளிம்பில் பட்டு 2வது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ரூட்டிடம் சென்றது, கையில் வந்த கேட்சை அவர் தட்டி விட்டு கோட்டை விட்டார்.

 

கேட்ச் விடப்பட்ட அடுத்த பந்துகளில் 80% பவுண்டரிக்குச் செல்லும் என்ற கிரிக்கெட்டின் எழுதப்படாத விதியின் படி அடுத்த பந்தை பாயிண்ட் வழியாக பவுண்டரிக்குத் திருப்பி ரோஹித் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

 

இதற்கு அடுத்த ஓவரில்தான் கே.எல்.ராகுல், வோக்ஸின் இன்ஸ்விங்கருக்கு சற்று முன்னதாகவே பிளிக் ஷாட்டுக்குத் தயாராகி மட்டையை திருப்ப பந்து முன் விளிம்பில் பட்டு வோக்ஸிடமே கேட்ச் ஆனது, டக் அவுட் ஆனார்.

 

வோக்ஸ் 3 ஓவர் 3 மெய்டன் 1 விக்கெட். ஆர்ச்சர் லைன் லெந்துக்குக் கொஞ்சம் போராடி 3 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார் . இடையில் ரோஹித் சர்மா ஒரு ரன் அவுட் வாய்ப்பிலும் எஸ்கேப் ஆனார்.

 

தற்போது கோலி 3 ராஜ பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்தும், ரோஹித் 11 ரன்கள் எடுத்தும் ஆடி வர இந்திய அணி 10 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்து ரன் ரேட்டில் மிகவும் பின் தங்கியுள்ளது.

இந்தியாவின் தோல்விக்கு தோனி மட்டும்தான் காரணமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x