Published : 22 Jun 2019 07:17 PM
Last Updated : 22 Jun 2019 07:17 PM

2010-க்குப் பிறகு முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் குறைவான ரன்கள்: இந்திய அணியின் ‘சூப்பர்ஸ்டார்’ வரிசையை முடக்கிய ஆப்கன் பந்துவீச்சு- 224 ரன்கள்

சவுதாம்டனில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 28வது ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி திக்கித் திணறி 50 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.

 

2010-க்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களையும் முழுதும் ஆடி எடுத்த குறைவான ரன்கள் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

 

விராட் கோலி மட்டுமே 63 பந்துகளில் 67 ரன்களை வேறொரு ஆட்டக்களம் போல் வேறொரு பந்து வீச்சில் ஆடியது போல் எடுத்தார், கடைசியில் கேதார் ஜாதவ் கூட மேட்ச் பிராக்டீஸ் இல்லாததால் தடுமாறினார், ஆனால் அவர் பயனுள்ள வகையில் 68 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து கடைசி ஒவரில் அவுட் ஆனார். இடையில் விஜய் சங்கர் 4ம் நிலையில் இறங்கி 41 பந்துகளில் 29 ரன்களை எடுக்க தோனி, ரஷீத் கானின் ஷார்ட் ஆக விழுந்த பந்துகளையெல்லாம் பீல்டர் கையில் நேராக அடித்து அடித்து ரன் விகிதத்தை குறைத்து  13 பந்துகளில் 11 டாட்பால்களை ஆடி எதிர்முனையில் விராட் கோலியை பதற்றப்படுத்தினார்.

 

இந்தப் பதற்றத்தில்தான் விராட் கோலி, நபியின் பந்தை ஆக்ரோஷமாக கட் ஆட முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார். மொத்தம் 300 பந்துகளில் 152 டாட் பால்களை இந்திய அணி விட்டுக் கொடுத்தது. தோனி 52 பந்துகள் ஆடி 28 ரன்களை எடுத்து அடிக்க வேண்டிய பந்துகளையெல்லாம் அடிக்காமல், ஸ்கோர் செய்யாமல் பீல்டர் கைகளில் அடித்து கடைசியில் ரஷீத் கானை மேலேறி வந்து ஆட முயன்று பந்தைக் கோட்டை விட்டு ஸ்டம்ப்டு ஆனார். தன் ஒருநாள் கிரிக்கெட் வாழ்நாளில் 2வது முறைதான் தோனி ஸ்டம்ப்டு ஆகிறார். அப்படியென்றால் அவரே எவ்வளவு அழுத்தப்பட்டிருக்கிறார் என்பதை யூகித்துக் கொள்ளலாம், ஆனால் இந்த அழுத்தம் அவர் தனக்குத் தானே போட்டுக் கொண்டதே.

 

தோனியும் ஜாதவ்வும் சேர்ந்து 57 ரன்களை 14 ஓவர்களில் சேர்த்து ஓவருக்கு 4 ரன்களுக்கும் கீழ் என்று சொதப்பினர். 10.4 ஓவர்கள் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

 

ஹர்திக் பாண்டியா 7 ரன்களில் அப்தாப் ஆலம் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

 

ரோஹித் சர்மா, ராகுல்  ஆட்டமிழந்த பிறகு 58 ரன்களை கோலி, விஜய் சங்கர் ஜோடி சுமார் 12 ஒவர்களில் சேர்த்தனர். கிட்டத்தட்ட இருவரும் ஆப்கானிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துக் கொண்டு செல்லும் நேரத்தில் விஜய் சங்கர் , ரஹ்மத் ஷா பந்தில் எல்.பி.ஆனார். 122/3 என்ற நிலையில் தோனி இறங்குகிறார். அதுவரை ரஷீத் கான் சரியாக வீசவில்லை ஷார்ட் பிட்ச் ஆகத்தான் வீசிக் கொண்டிருந்தார், தோனி இறங்கிய பிறகும் ஷார்ட் ஆகத்தான் வீசினார், ஆனால் தோனி அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் ஆடியது எதிர் முனையில் இருக்கும் மாஸ்டர் விராட் கோலியை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையோ என்ற ஐயத்தை கிளப்புகிறது, பொதுவாக ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யும் தோனியைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

அவர் ரொம்பவும் டாட்பால்கள் விட்டால் எதிர்முனையிலும் சரியான வீரர் இல்லை என்பதாலேயே இருக்கும், ஆனால் இம்முறை கோலி இருக்கிறார், அற்புதமாக ஆடிவருகிறார், ஆனால் 13 பந்துகளில் 11 பந்துகளை சாப்பிட்டதால் கோலி கொஞ்சம் டென்ஷனாகிப் போய்தான் அந்த ஷாட்டை வாரிக்கொண்டு அடிக்கப் போனார்.

 

ஆப்கான் அணியில் முஜிபுர் ரஹ்மான் 10 ஓவர்கள் வீசி 1 மெய்டனுடன் 26 ரன்களுக்கு 1 விக்கெட். குல்பதீன் நயீப் 2 விக்கெட்டுகளையும் மொகமது நபி 2 விக்கெட்டுகளையும் ரஹ்மத் ஷா, ரஷீத் கான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர், ஆப்கானில் வீசியவர்களுக்கெல்லாம் வஞ்சம் வைக்காமல் விக்கெட் கொடுத்தது இந்திய அணி.

 

இப்போது என்ன? 225 ரன்களை ஆப்கன் அணி எடுக்காமல் ‘உலகின் சிறந்த’ இந்தியப் பந்து வீச்சு கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x