Published : 21 Jun 2019 12:48 PM
Last Updated : 21 Jun 2019 12:48 PM
இங்கிலாந்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்குப் பயன்படுத்தப்படும் பிட்ச்கள் மட்டைப் பிட்ச்களாக உள்ளன, ஸ்விங்கும், இல்லை வேகமும் இல்லை ஒன்றும் இல்லை, தான் அப்படிப்பட்ட பிட்ச்களில் வீசிப்பழக்கப்பட்டவனல்ல என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார்.
காற்றிலும் பந்தில் ஸ்விங் இல்லை பிட்ச் ஆன பிறகும் பந்துகள் ஒன்றும் ஆவதில்லை என்கிறார் பும்ரா. இங்கிலாந்து பவுலர்களுக்கு சொர்க்கபுரி, ஸ்விங் ஆகும் போன்றவையெல்லாம் வெறும் மாயையோ, காட்சிப்பிழையோ என்று ஐயம் எழுப்புகிறார் பும்ரா.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறிய போது, “நான் இதுவரை ஆடிய குறைந்த ஓவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுகளில் இங்கிலாந்து போல் வெறும் மட்டைப் பிட்ச்களைக் கண்டதில்லை. பவுலர்களுக்கு இந்தப் பிட்ச்களின் மூலம் ஒரு உதவியும் இல்லை.
நாம் நம் துல்லியத்திலும் கட்டுக்கோப்பிலும் வீச வேண்டும், இதைத்தான் நாம் நம்ப வேண்டும். அதைத்தான் இங்கு செய்கிறோம். இங்கிலாந்தில் பிட்ச்கள் மட்டையாக உள்ளன, ஆகவே அதன் மோசமான தருணங்களையும் கருத்தில் கொண்டுதான் ஆடுகிறோம். கொஞ்சம் பிட்ச் உதவி செய்தால் அட்ஜஸ்ட் செய்வது சுலபம்.
சவுத்தாம்ப்டனில் நாங்கள் முதல் போட்டியை ஆடிய போது (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) புதிய பந்தில் வீசும் போது கொஞ்சம் பவுலிங்குக்கு உதவிகரமாக இருந்தது. அது நல்ல பிட்ச். ஆனால் பந்து லேசாகப் பழசானாலும் பேட்டிங்குக்குச் சாதகமே. ஓவல் மைதானம் பேட்டிங் பிட்ச், அங்கு 350 சராசரி ஸ்கோராக உள்ளது.
ஆனால் இவற்றையெல்லாம் முன் கூட்டியே யோசிக்கக் கூடாது, ஆட்டம் நடைபெறும் தினத்தன்று பிட்சைப் பார்க்க வேண்டும் நமக்கு இதில் எது சரிப்பட்டு வருமோ அதைத் தேர்வு செய்து ஆட வேண்டும், விரைவில் பிட்சைக் கணித்து, சரி ஒன்றுமில்லையா நம் பலங்களுக்கு வீச வேண்டும். ஸ்விங் ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்த பந்து வீசலாம் ஸ்விங் இல்லை என்றால் நாம் நம் அடிப்படைகளுக்குத் திரும்பி துல்லியம் கட்டுக்கோப்புடன் வீச வேண்டியுள்ளது” என்றார் பும்ரா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT