Published : 20 Jun 2019 03:07 PM
Last Updated : 20 Jun 2019 03:07 PM
இந்தியாவுக்கு அடுத்த சோதனை ஏற்பட்டுள்ளது. பயிற்சியின் போது, பும்ரா வீசிய யார்க்கர் பந்துவீச்சில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரின் கணுக்காலில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தசைபிடிப்பால் புவனேஷ்வர் குமார் அடுத்த 3 போட்டிகளுக்கு விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவண் பெருவிரல் எலும்பு முறிவால் விலகியுள்ளநிலையில், ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போது, விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதற்கான தீவிரமான பயிற்சியில்நேற்று ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பும்ரா பந்துவீச, அதை விஜய்சங்கர் எதிர்கொண்டார். பும்ரா வீசிய யார்க்கர் பந்து விஜய் சங்கரின் கணுக்கால் பகுதியில் பட்டது. உடனடியாக பேட்டிங் செய்வதை நிறுத்திய விஜய் சங்கர் வலியால் துடித்தார்.
உடனடியாக அங்கிருந்த வீரர்கள் விஜய் சங்கரை வேறு இடத்தில் அமரவைத்தனர். அணியின் மருத்துவர்கள் குழு விஜய் சங்கரை ஆய்வு செய்து முதலுதவி அளித்தனர். வலி அதிகமாக இருந்ததால், விஜய் சங்கர் அதன்பின் பேட் செய்யவில்லை.
இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் கேட்டபோது, " பும்ரா வீசிய யார்க்கரில் விஜய் சங்கரின் கணுக்காலில் பந்துபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. லேசான காயம்தான், வலி இருக்கிறது என்று விஜய் சங்கர் கூறியுள்ளார். ஆனால், கவலைப்படும் விதமாக காயம் ஏதும் இல்லை. எந்தவிதமான காயமும் பெரிதாக ஏற்படாது என்று நம்புகிறோம். மாலையில் விஜய் சங்கருக்கு வலி குறைந்துவிட்டது" எனத் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சேர்க்கப்பட்ட விஜய் சங்கர் 4-வது இடத்தில் களமிறங்கி கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்தார். பந்துவீச்சிலும் பிரமாதப்படுத்திய விஜய் சங்கர், பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், சர்பிராஸ் அகமது விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
ஷிகர் தவணுக்கு காயம் ஏற்பட்டதில் இருந்து பிசிசிஐ நிர்வாகம் முறையான பதிலை கூறவில்லை. லேசான காயம்தான் 2 வாரங்களுக்கு விளையாடமாட்டார் என்று தொடக்கத்தில் தெரிவித்தது.
ஆனால், ஷிகர் தவணுக்கு ஏற்பட்ட காயம்குறித்த தகவல் ஊடகங்களுக்கு தெரிந்தவுடன், வேறுவழியின்றி பிசிசிஐ தவண் காயம் குறித்த உண்மை நிலவரத்தை வெளியிட்டது.
இப்போது புவனேஷ்வர் விஷயத்திலும் அதேபோன்ற நிலைப்பாட்டையே பிசிசிஐ தொடர்ந்து கடைபிடித்து 30-ம்தேதி வரை விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கிறது. புவனேஷ்வர் குமாரின் காயம் குறித்த உண்மைத் தகவலும் இல்லை, விஜய் சங்கர் குறித்த தகவலும் உண்மையானதா எனத் தெரியவில்லை.
ஒருவேளை புவனேஷ்வர்குமாரும் அணியில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டால், கலீல் அகமது, இசாந்த் சர்மா நவ்தீப் ஷைனி ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT