Last Updated : 18 Jun, 2019 01:34 PM

 

Published : 18 Jun 2019 01:34 PM
Last Updated : 18 Jun 2019 01:34 PM

எங்கள் குடும்பத்தாரை மரியாதைக் குறைவாகப் பேசாதீர்கள்: ரசிகர்களுக்கு ஷோயிப் மாலிக், அமீர் வேண்டுகோள்

எங்கள் குடும்பத்தார் குறித்து அவச்சொற்களைப் பேசாதீர்கள். மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று பாகிஸ்தான் வீரர்கள் ஷோயிப் மாலிக், முகமது அமீர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்களில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. 7-வது முறையாக உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வெல்ல முடியாமல் தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததற்குப் பின் அந்த அணி வீரர்களை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். மெத்தனமாக விளையாடினார்கள் என்று முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதில் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர், அளித்த பேட்டியில், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதுவை மூளையில்லாதவர் என்று கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முதல் நாளில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் ஹோட்டலில் சென்று துரித உணவுகள் சாப்பிடும் காட்சி குறித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது. இவ்வாறு சாப்பிட்டால் எவ்வாறு விளையாட முடியும் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து காட்டமாக கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஷோயிப் மாலிக் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "வீரர்கள் சார்பில் நான் ஊடகங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். ரசிகர்களும், மக்களும் எங்கள் குடும்பத்தினருக்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளியுங்கள். மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பிரயோகம் செய்யாதீர்கள். யாரையும் மோசமான முறையில் விவாதத்துக்கு அழைக்கக் கூடாது. அது சரியானதும் அல்ல. நாங்கள் ஹோட்டலில் சாப்பிடும் காட்சி குறித்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து யாரும் யோசிக்கவில்லை.

அந்தக் காட்சிகள் அனைத்தும் 13-ம் தேதி எடுக்கப்பட்டவை. நாங்கள் போட்டிக்கு முந்தைய நாளில் எங்கும் செல்வில்லை. பாகிஸ்தான் ஊடகங்கள் எப்போதுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்படப் போகின்றன?

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் நாட்டுக்காக விளையாடுகிறேன். ரசிகர்கள் பேசுவதைக் கேட்டும், என்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பாக விளக்கம் அளிப்பதும் வேதனையாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் முகமது யூசுப் அளித்த பேட்டியில், இனிவரும் போட்டிகளில் ஷோயிப் மாலிக்கிற்கு அணியில் இடம் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.

முகமது அமீர் ட்விட்டரில் விடுத்த கோரிக்கையில், " ரசிகர்கள் தயவு செய்து, வீரர்களின் குடும்பத்தார் குறித்து தவறான, மோசமான சொற்களைப் பயன்படுத்தாதீர்கள். நாங்கள் மோசமாக விளையாடிவிட்டாலும், இறைவன் அருளால் மீண்டும் சிறப்பாக விளையாடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், ட்வீட்டுக்கு சானியா மிர்சாவும் பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "வீரர்கள் ஹோட்டலில் இருப்பது போன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் போட்டிக்கு முந்தைய நாளில் எடுக்கப்பட்டவை அல்ல. அவை 3 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டவை. இந்தியாவுடனான போட்டிக்கு முதல் நாள் இரவு அனைத்து வீரர்களும் அறையில்தான் இருந்தார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x