Published : 17 Jun 2019 04:59 PM
Last Updated : 17 Jun 2019 04:59 PM
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய்க்கு இடது தொடையின் தசைநாரில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த 2 போட்டிகளுக்கு விளையாடமாட்டார் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேஸன் ராய் ஃபீல்டிங் செய்தபோது அவருக்குக் காயம் ஏற்பட்டு அப்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டபோது, இடது தொடையில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதனால், அடுத்த ஒரு வாரத்துக்கு ராய் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நாளை ஓல்ட்டிராபோர்டில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், ஹெடிங்கிலியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் ராய் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் ஜேஸன் ராய்க்கு ஏற்பட்ட காயத்தை மருத்துவர்கள் ஆய்வு செய்து, அடுத்த கட்ட முடிவை அறிவிப்பார்கள்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராய்க்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில் அவரின் இடதுதொடையில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. ஆதலால், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து ராய் நீக்கப்படுகிறார்.
இதேபோல கேப்டன் மோர்கனுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவுதான். ராய்க்குப் பதிலாக, மொயின் அலி, அல்லது ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் களமிறங்கலாம் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT