Last Updated : 17 Jun, 2019 01:40 PM

 

Published : 17 Jun 2019 01:40 PM
Last Updated : 17 Jun 2019 01:40 PM

பாக். தோல்விக்கு பர்கர் காரணமா?- மல்யுத்தத்துக்கு போங்க;. நீங்கெல்லாம் எதுக்கு கிரிக்கெட் விளையாடுறீங்க: வறுத்தெடுத்த ரசிகர்கள்

உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை வழக்கம் போல் அந்நாட்டு ரசிகர்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.

வீரர்களின் உடல்தகுதி குறித்தும், வீரர்கள் களத்தில் செயல்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பிய ரசிகர்கள் இதுபோன்ற உடம்பை வைத்துக்கொண்டு கிரிக்கெட் ஏன் விளையாடுகிறீர்கள், மல்யுத்தம் விளையாடப் போகலாமே என்று கிண்டல் செய்தும் காட்டமாக சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 6 முறையும் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றதில்லை. இந்நிலையில், மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் வெல்லுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். ஆனால், வழக்கம்போல் இந்த முறையும் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்களில் 7-வது முறையும் வென்று வரலாற்றை தக்கவைத்ததுக் கொண்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களின் மந்தமான செயல்பாடு, தொப்பையுடன் கூடிய உடல்வாகு, களத்தில் வேகமாக ஓடமுடியாத நிலையில் உடலை தகுதியற்று வைத்திருப்பது போன்றவற்றைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் நடப்பதற்கு முந்தைய இரவு பாகிஸ்தான் அணி வீரர்கள் ஹோட்டலுக்கு சென்று பீட்ஸா, பர்கர் சாப்பிட்டதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் 15 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் " இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு முந்தைய நாள் இரவு பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் பீட்ஸாவும், பர்கரும் சாப்பிட்டார்கள். இவர்களால் எப்படி கிரிக்கெட் விளையாட முடியும். பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு பதிலாக மல்யுத்தம் விளையாடச் செல்லலாம். அவர்களின் உடல்தகுதியைப் பாருங்கள். நாங்கள் பாகிஸ்தான் வீரர்கள் ஏராளமான நம்பிக்கையும், ஆசையும் வைத்திருந்தோம். ஆனால், அவர்களோ பீட்ஸா,பர்கர் மீதுதான் ஆசை வைத்திருந்தார்கள் " எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு ரசிகர் ஒருவர் பதிவிடுகையில், ’’இம்ரான் கான் அணியின் கேப்டனாக இருக்கும் வரை, பயிற்சிக்குப் பின் எந்த வீரரையும் பீட்ஸா, பர்கர் சாப்பிட அனுமதிக்கமாட்டார். குறிப்பாக வாசிம் அக்ரம் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களை அனுமதிக்கமாட்டார். ஆனால், இப்போதுள்ள பாகிஸ்தான் வீரர்கள் பர்கரும், பீட்ஸாவும் சாப்பிடுகிறார்கள்’’ என காட்டமாக விமர்சித்துள்ளார்.

மற்றொரு பாக். ரசிகர் பதிவிட்ட கருத்தில் " இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன் இரவு விருந்தில் அதிகாலை 2 மணிவரை பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் கேப்டன் சர்பிராஸ் அகமது 4 பர்கர்கள் சாப்பிட்டுள்ளார். தோல்விக்கு பர்கர்தான் காரணம் " எனக் கிண்டல் செய்துள்ளார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு ஒரு ரசிகர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், " சானியா மிர்ஸாவுக்கு நன்றி, அவரின் கணவர் ஷோயிப் மாலிக்கை, இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் நள்ளிரவு 2 மணிவரை பார்ட்டியில் பங்கேற்க அனுமதித்தமைக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x