Published : 16 Jun 2019 09:10 PM
Last Updated : 16 Jun 2019 09:10 PM

உலகக்கோப்பையில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்: 3வது வீரராக விஜய் சங்கர் சாதனை

மான்செஸ்டரில் நடைபெறும் 2019 உலகக்கோப்பையின் 22வது ஆட்டத்தில் 337 ரன்கள் என்ற இந்திய அணி நிர்ணயித்த இலக்கை விரட்டி வரும் பாகிஸ்தான் இமாம் உல் ஹக் விக்கெட்டை இழந்து 11.3 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

 

இதில் புவனேஷ்வர் குமார், பும்ரா பவுலிங்கைத் தொடங்க, பாகிஸ்தானில் பகர் ஜமான், இமாம் உல் ஹக் தொடங்கினர்.

 

இந்நிலையில் இன்னிங்ஸின் 5வது ஒவரை வீசிய புவனேஷ்வர் குமார் அட்டகாசமாக வீசி வந்த நிலையில் 4வது பந்தை வீசியவுடன் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேற நேரிட்டது.

 

அப்போது தமிழக வீரர் விஜய் சங்கரை விராட் கோலி மீதமுள்ள 2 பந்துகளை வீச அழைத்தார். என்ன ஆச்சரியம் நேராக ஓடி வந்து ஒரு ஃபுல் லெந்த் பந்தை இடது கை வீரரான இமாம் உல் ஹக்கிற்கு உள்ளே லேசாகக் கொண்டு வர இமாம் உல் ஹக் பீட்டன் ஆகி கால்காப்பில் வாங்கினார், பிளம்ப் எல்.பி.டபிள்யூ., அவர் ரிவியூ வேண்டாம் என்று முடிவெடுத்தது நல்லாதாகிப் போனது, ஏனெனில் நேராக வாங்கிவிட்டார்.

 

உலகக்கோப்பை போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய பெருமைக்குரிய 3வது வீரரானார் விஜய் சங்கர். முன்னதாக பெர்முடா வீரர் மலாச்சி ஜோன்ஸ் , ராபின் உத்தப்பா விக்கெட்டை 2007 உலகக்கோப்பையில் தன் முதல் பந்தில் வீழ்த்த, இன்னொரு வீரர் இயன் ஹார்வி ஆவார்.

 

பாகிஸ்தான் அணி தற்போது 1 விக்கெட் இழப்புக்கு 13 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்துள்ளது, பாபர் ஆஸம் 23 ரன்களுடனும் பகர் ஜமான் 19 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x