Published : 04 Jun 2019 03:33 PM
Last Updated : 04 Jun 2019 03:33 PM
தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ்சுக்கு இந்த உலகக்கோப்பைதான் கடைசி 50 ஒவர் கிரிக்கெட்டாக அமையலாம் என்ற ஊகங்களுக்கு இடையில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடாதான் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் அடுத்த கேப்டன் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்கள் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிலருக்கு ‘கோல்பாக் ஒப்பந்தம்’ மூலம் வலை விரித்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து இழுத்து வருகிறது. நல்ல நல்ல வீரர்களெல்லாம் இங்கிலாந்து கவுண்டிக்குச் சென்று விட்டனர். தென் ஆப்பிரிக்க அணியின் ‘கோட்டா’ முறையினால் வாய்ப்புகள் குறித்த ஐயத்தில் சில வீரர்கள் இங்கிலாந்து சென்று விட்டனர்.
இது குறித்து ரபாடா கூறும்போது, “கோல்பாக் உண்மையில் ஒரு பிரச்சினைதான். ஆனால் வீரர்களுக்கான தெரிவு எப்போதும் உள்ளது. என்னைப் பொறுத்தவரை நாட்டுக்காக ஆடுவதுதான் பெரிய விஷயம் என்று கருதுகிறேன்” என்றார்.
மேலும் ஃபாப் டு பிளெசிஸுக்குப் பிறகு ரபாடாதான் கேப்டன் என்ற பேச்சு அடிபடுகிறதே என்று ரபாடாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
என்னிடம் இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. என்னிடம் பொறுப்பு அளிக்கப்பட்டால் அதனை சவாலாகக் கருதி ஏற்பேன். நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
அடிக்கடி என்னிடம் கேப்டன்சி பற்றி கேட்கும் போதெல்லாம் என்னை நான் கேப்டனாகவே நினைத்து கொள்வேன் களத்தில் கேப்டனாக நினைத்துக் கொண்டு ஆட்டத்தின் சூழ்நிலைகள் பற்றி மதிப்பிடுவேன்.
ஆகவே கேப்டனாக வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதனை ஒரு சவாலாகக் கருதி ஏற்பேன். நிச்சயம் என்னில் சிறந்த பங்களிப்பை அளிப்பேன்”
இவ்வாறு கூறினார் ரபாடா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT