Published : 15 May 2019 08:42 PM
Last Updated : 15 May 2019 08:42 PM

இங்கிலாந்து அணிக்குப் பின்னடைவு: கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டித் தடை

பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மழையால் முடிவு ஏற்படாமல் போக மீதமுள்ள 4 போட்டிகளில் இங்கிலாந்து 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

 

செவ்வாயன்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த இமாலய இலக்கான 359 ரன்களை இங்கிலாந்து சர்வசாதாரணமாக விரட்டி 31 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.

 

ஜானி பேர்ஸ்டோ பாகிஸ்தான் பந்து வீச்சை புரட்டி எடுத்து சதம் எடுத்தார். ஜேசன் ராய் அரைசதம் எடுத்தார். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரிஸ்டலில் இந்த வெற்றியை இங்கிலாந்து பெற்றது.

 

இந்தப் போட்டியில் குறித்த நேரத்தில் ஓவர்களை முடிக்காமல் இங்கிலாந்து  2 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது. இதனையடுத்து ஆட்ட நடுவரு ரிச்சி ரிச்சர்ட்ஸன் விதிமுறைகளின் படி இங்கிலாந்து கேப்டனுக்கு ஒரு போட்டி தடை விதித்து உத்தரவிட்டார்.

 

பிப்ரவரி 22ம் தேதி பார்படாஸ் ஒருநாள் போட்டியிலும் மோர்கன் தலைமையில் மே.இ.தீவுகளுக்கு எதிராக குறித்த நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை.

 

ஆகவே 12 மாத காலத்துக்குள் 2வது முறையாக ஒரே தவறைச் செய்ததால் ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது மோர்கனுக்கு. மேலும் அவர் ஆட்டத்தொகையில் 40% அபராதம் கட்ட வேண்டும்.

 

இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து 20% தொகையை அபராதமாகச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

 

4வது ஓருநாள் போட்டி வெள்ளியன்று நடைபெறுகிறது, 5வது, இறுதி ஒருநாள் போட்டி மே 19--ல் நடக்கிறது. பாகிஸ்தான் தொடரை வெல்ல வாய்ப்பில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x