Last Updated : 29 Mar, 2019 05:01 PM

 

Published : 29 Mar 2019 05:01 PM
Last Updated : 29 Mar 2019 05:01 PM

மன்கட் சர்ச்சையில் இருந்து மீள்வாரா அஸ்வின்: நாளை மும்பை இந்தியன்ஸுடன் பஞ்சாப் அணி மோதல்

மன்கட் சர்ச்சை, 30 யார்ட் வட்டத்துக்குள் 3 பீல்டர்களை நிறுத்தியது ஆகிய இரு சர்ச்சைகளில் துவண்டுபோயுள்ள அஸ்வின் தலைமையிலான அணி, மீண்டெழுந்து நாளை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மும்பையில் நாளை மாலை 4 மணிக்கு ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் முதல் ஆட்டமாக இது நடக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன. அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு இரு அணிகளுக்கும் இந்த போட்டியில் வெற்றி தேவை என்பதால், முக்கியமானதாக இருக்கும்.

அஸ்வினை தலைமையாகக் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. அதில் ராஜஸ்தான் வீரர் பட்லரை மன்கட் முறையில் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தது, சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விவாதப்பொருளானது. விதிப்படிதான் அஸ்வின் செயல்பட்டாலும், ஸ்பிரிட் ஆப்தி கிரிக்கெட்டை மீறிவிட்டார் என்று வீரர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இதே மனநிலையுடன் கொல்லகத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் அஸ்வின்  30 யார்ட்ஸ் வட்டத்துக்குள் 3 பீல்டர்களை நிறுத்தியதால்,முக்கியமான கட்டத்தில் ஷமி ஓவரில் கொல்கத்தா வீரர் ரஸல் போல்டாகியும் அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது வாய்ப்பு பெற்ற ரஸல், அதிரடியில் இறங்கி 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணியும் 200 ரன்கள் மேல் சென்றது.

பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் 3 பீலடர்களை நிறுத்தியதால் கிடைத்த நோபால், அதனால் ரஸலின் காட்டடி, தொடர்ந்து ஏற்பட்ட தோல்வி என சங்கிலித்தொடர்போல் அமைந்துவிட்டது. இவை அனைத்தையும் கடந்து நாளை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கிங்ஸ்லெவன் அணி விளையாட வேண்டும்.

கொல்கத்தா அணிக்கு எதிராக அறிமுக வீரர் வருண் சக்கர வர்த்தியையும், ஹார்டஸ் விலோயனையும் களமிறக்கி தவறு செய்தார். அதில் வருண் சக்கரவர்த்தியின் முதல் ஓவரில் சுனில் நரேன் 25 ரன்கள் விளாசி பெரிய தண்டனை அளித்தார். விலோயன் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தார். ஆதலால் இருவருக்குப் பதிலாக வேறு வீரர்கள் நாளை களமிறங்கலாம்.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை ராகுல், சர்பிராஸ் கான்,  கெயில், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், கருண் நாயர் உள்ளிட்ட  பேட்ஸ்மேன்களை நம்பியே இருக்கிறது. இதில் கெயில் ஒரு போட்டியில் மட்டுமே அடித்து ஆடினார், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சோபிக்கவில்லை. களத்தில் நிலைத்து விட்டால், தனிமனிதராக அணியை கொண்டு சென்றுவிடும் திறமை கெயிலுக்கு உண்டு.

ராகுல் இரு ஆட்டங்களிலும் ஏமாற்றம் அளித்தார். இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் முஜிப்பூர் ரஹ்மான், அஸ்வின், ஆன்ட்ரூ டை உள்ளிட்டோர் மட்டுமே நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீசக்கூடியவர்கள்.

ஆர்சிபி அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில்  மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த வெற்றியும் சர்ச்சைக்குரியதாக மாறியது. மலிங்கா வீசிய கடைசி ஓவரின் கடைசிப்பந்தை நோபால் அறிவிக்காததால், மும்பை வென்றது. இதற்கு ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கடுமையாகச் சாடினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை பும்ரா, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, யுவராஜ் சிங், பர்தீப் படேல், பொலார்ட், மலிங்கா, மார்கண்டே என பேட்டிங்கில் வலிமையான வரிசை இருக்கிறது. ஆனால், நிலைத்து ஆடுவதில் வீரர்களிடையே சிக்கல் இருப்பதால், பல நேரங்களில் மும்பை அணி வெற்றியை நழுவவிடுகிறது.

ஆர்சிபி அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிய பும்ரா 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மலிங்கா அனுபவமான பந்துவீச்சாளர் என்கிறபோதிலும் சில நேரங்களில் அவரின் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு  இரையாகிவிடுகிறது.

யுவராஜ் சிங் மும்பையில் கவனிக்கத்தக்க வீரராக வலம் வருகிறார். கடந்த ஆட்டத்தில் சாஹல் ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்து கவனத்தை ஈர்த்தார், முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். ஆதலால், யுவராஜ்சிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மொஹாலி ஆடுகளம் யுவராஜ் சிங்குக்கு சொந்த மண் என்பதால், நிச்சயம் அவர் சிறப்பாக விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இரு அணிகளும் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு முக்கியமான ஆட்டம் என்பதால், வெற்றிக்காக கடுமையாகப் போராடக்கூடும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x