Last Updated : 29 Mar, 2019 07:25 AM

 

Published : 29 Mar 2019 07:25 AM
Last Updated : 29 Mar 2019 07:25 AM

நோ-பால் அறிவிக்காததால் பரிதாபமாக தோற்ற ஆர்சிபி: “அம்பயரும் விளையாடியதால்” மும்பைக்கு முதல் வெற்றி: கோலி புதிய சாதனை

பும்ராவி்ன் கடைசி 3 ஓவர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, மலிங்காவின் கடைசி ஓவர் கடைசி பந்தில் நடுவர் தராத நோபால் ஆகியவற்றால் பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் 7-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 ரன்களில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.

பெங்களூருவில் நடந்த போட்டிகளில் ஆர்சிபி அணி சேஸிங் செய்யும்போது டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்த எந்த ஒரு போட்டியிலும் இதற்குமுன் அந்த அணி தோற்றது இல்லை. ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக டிவில்லியர்ஸ் 70 ரன்கள் நாட்அவுட் என்று இருந்தும் ஆர்சிபி அணி இப்போதுதான் தோற்றுள்ளது.

நோ-பால் சர்ச்சை

கடைசி ஓவரின் கடைசிப்பந்து, மலிங்கா கிரீஸைவிட்டு கடந்து வீசியவுடன் அது நோ-பால் என டிவி ரீப்ளேயில் தெரிந்தது. அதற்கு நோ-பால் வழங்காததால், ஆர்சிபி அணி பரிதாபமாக தோற்றது.

உண்மையில் இந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட வேண்டியது, நடுவரின் தீ்ர்ப்பால் ஆட்டத்தின் முடிவே மாறிப்போனது. ஏறக்குறைய நடுவரும் மும்பை இந்தியன்ஸ் வீரராக கடைசிநேரத்தில் நடந்து கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது.

பும்ரா ஆட்டநாயகன்

பும்ரா தன்னை மீண்டும் சிறந்த சர்வதேச பந்துவீச்சாளராக நிரூபித்துவி்ட்டார். தான் வீசிய கடைசி 3 ஓவர்களில் வெறும் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து , கோலி, ஹெட்மயர், கிராண்ட்ஹோம் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியை நெருக்கடிக்கு தள்ளினார். டிவில்லியர்ஸை நிற்கவைத்து படம் காட்டினார் பும்ரா. கடைசி நேரத்தில் பும்ரா வீசிய கட்டுக்கோப்பான பந்துவீச்சு வெற்றியை ஆர்சிபி அணிக்கு மேலும் சிக்கலாக்கியது. ஆட்டநாயகன் விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது.

கோலி சாதனை

விராட் கோலி இந்த போட்டியில் 46 ரன்கள் சேர்த்தபோது, ஐபிஎல் வராலாற்றில் 5 ஆயிரம் ரன்கள் சேர்த்த 2-வது வீரர் எனும் பெருமையைப் ெபற்றார். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை எட்டியநிலையில் கோலி 157 இன்னி்ங்ஸ்களில் எட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், டிவில்லியர்ஸ் நேற்றைய ஆட்டத்தில் ஐபிஎல் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம்  4  ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வெளிநாட்டு வீரர் எனும் பெருமையை டிவில்லியர்ஸ் பெற்றார்.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் செய்தது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டீகாக் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் சேர்த்து சைனி, உமேஷ், சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். பவர்-ப்ளேயில் 52 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.

7-வது ஓவரை சாஹல் வீசியபோது முதல் விக்கெட்டை இழந்தது மும்பை அணி. க்ளீன் போல்டாகிய டீகாக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த யாதவ், ரோஹித்துடன் இணைந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் வேகத்தை கூட்டினர்.

ரோஹித் ஆட்டமிழப்பு

உமேஷ்யாதவ் வீசிய 11-வது ஓவரில் லாங்-ஆன் திசையில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்கள் (8பவுண்டரி, ஒருசிக்ஸர்) சேர்த்து வெளியேறினார். அடுத்து யுவராஜ் சிங் களமிறங்கினார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது

யுவராஜ் சிக்ஸர் மழை

மொயின் அலி வீசிய 13-வது ஓவரில் யாதவ் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை தக்கவைத்தார். சாஹல் வீசிய 14-வது ஓவரில் யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இதனால், மீண்டும் 6 சிக்ஸர்களை அடிக்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. 4-வது பந்தில் மீண்டும் சிக்ஸருக்கு யுவராஜ் சிங் முயற்சித்த நிலையில் சிராஜிடம் பவுண்டரியில் கேட்சானது. யுவராஜ் சிங் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பொலார்ட் களமிறங்கினார்.

நிதானமாக பேட் செய்து வந்த யாதவ் 38 ரன்கள் சேர்த்த நிலையில், சாஹலின் 16—வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த குர்னல் பாண்டியா முதல் பந்தை நேராக சாஹலிடம் அடிக்க அதை அவர் தவறவிட்டார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் பொலார்ட் எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்க அதை ஹெட்மயர் லாவகமகப் பிடித்தார். பொலார்ட் 5 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்

உமேஷ் யாதவ் வீசிய 17-வது ஓவரில் சிக்ஸருக்கு முயற்சித்த குர்னல் பாண்டியா ஒரு ரன் சேர்த்த நிலையில் சைனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மெக்லனஹன் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் வெளியேறினார்.

மார்கண்டே வந்து ஹர்திக்குடன் இணைந்தார். கடைசி 2 ஓவர்களில் ஹர்திக் பாண்டியா காட்டடி அடித்து சிக்ஸர், பவும்டரி விளாச மீண்டும் ரன்ரேட் உயரத் தொடங்கியது. சிராஜ் வீசிய கடைசி ஓவரில் மார்கண்டே 6 ரன்களில் விக்கெட் கீப்பர் பர்தீப் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்ஸர்கள்,2 பவுண்டரிகள் அடங்கும்.

 20ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 187  ரன்கள் சேர்த்தது. பெங்களூரு தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், உமேஷ், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

188ரன்கள் இலக்கு

188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. பர்தீவ் படேல், மொயின் அலி களமிறங்கினர். மெக்லனஹன் வீசிய முதல் ஓவரில் படேலின் ஒரு பவுண்டரி உள்பட 7 ரன்கள் சேர்த்தனர். மல்லி்ங்கா தனது முதல் ஓவலிலே யார்கரையும், பவுன்ஸரையும் வீசி திணறடித்து 3 ரன்கள் மட்டுேம விட்டுக்கொடுத்தார். மெக்லஹன் வீசிய 3-வது ஓவரில் படேல் ஒரு பவுண்டரி விளாச, மொயின் அலி சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து சிதறடித்தார்.

ரன்வேகத்தை கட்டுப்படுத்த பும்ரா வரவழைக்கப்பட்டார். 2-வது பந்தில் மொயின் அலி 13 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த வந்த விராட் கோலி, வந்தவேகத்தில் பும்ரா ஓவரில் “ஹாட்ரிக் பவுண்டரி” விளாசி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

ஹர்திக் பாண்டியா வீசிய 5-வது ஓவரி்ல் கோலி இரு பவுண்டரிகளை தள்ளினார். குர்னல் பாண்டயிா வீசிய 6-வது ஓவரில் பர்தீவ் படேல் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.

மார்கண்டே வீசிய 7-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பர்தீவ் கடைசி பந்தில் போல்டாகி 31 ரன்களில்(ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

அடுத்து டிவில்லியர்ஸ் வந்து கோலியுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக பேட் செய்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர். மார்கண்டே வீசிய 11-வது ஓவரில் கோலி பவுண்டரியும், டிவில்லியர்ஸ் சிக்ஸரும் அடித்து ரன்ரேட்டை தக்கவைத்தனர். ஓவருக்கு 10 ரன்கள் என்ற நிலையில்  சென்றது.

14-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இருந்துதான் திருப்புமுன் ஏற்பட்டது.

கோலி 46 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்விக்கெட் திசையில் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் 49 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஹெட்மயர் களமிறங்கி, டிவில்லியர்ஸுடன் இணைந்தார். அதன்பின் டிவில்லியர்ஸ் அதிரடியில் இறங்கினார்.

ஹர்திக் பாண்டியா வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரிகளும்,மல்லிங்கா வீசிய 16-வது ஓவரில் 2 சிக்ஸர்கள்,ஒருபவுண்டரியும் விளாசி டிவில்லியர்ஸ் வானவேடிக்கை நிகழ்த்தினார்.

மீண்டும் பும்ரா வந்தார். 17-வது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் 5 ரன்களில் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து கிராண்ட்ஹோம் களமிறங்கினார். இந்த ஓவரிலும் ரன்களை வழங்காமல் பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச, டிவில்லியர்ஸ் அதை நொறுக்கி எடுத்தார். மீண்டும் ஒருபவுண்டரி, 2 சிக்ஸர்களை டிவில்லியர்ஸ் விளாசினார்.

18-வது ஓவரை பும்ரா வீச வந்தபோது, கிராண்ட் ஹோம் விக்கெட்டை வீழ்த்தினார். துபே களமிறங்கினார். இந்த ஓவரில் ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடியாக பும்ரா பந்துவீசினார். டிவில்லியர்ஸும் ரன் சேர்்க்க திணறினார். பும்ரா கடைசியாக வீசிய 3 ஓவரிலும் தலா ஒரு விக்கெட்டையும், 8 ரன்களையும் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

சர்ச்சை கடைசி ஓவர்

கடைசி ஓவரை மல்லிங்கா வீசினார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட துபே சிக்ஸர் அடித்து ரசிகர்களை  உற்சாகப்படுத்தினார். 2-வது பந்து முதல் 5-வது பந்துவரை சிங்கல் ரன்கள் எடுக்க 10 ரன்கள் கிடைத்தது. மல்லிங்கா தனது அனுபவமான பந்துவீ்ச்சில் ஷாட்களை அடிக்கவிடாமல் ஸ்விங்குகளையும், யார்கர்களைும் வீசி திணறடித்தார்.

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் ஆட்டம் டிரா, அல்லது தோல்வி என்ற நிலையில் இருந்தது.

நோ-பால்

மல்லிங்கா வீசிய கடைசி பந்தில் ரன்ஏதும் அடிக்கமுடியாததால், பெங்களூரு அணி 6 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆனால், மல்லிங்கா தனது கடைசி பந்தை கரீஸை விட்டு வெளியே சென்று வீசி நோபாலாக வீசி இருந்தார். இதை நடுவர் பார்த்தும் இதற்கு மூன்றாவது நடுவருக்கு கேட்கவில்லை. நோபால் என்பது ரீப்ளேயில் தெளிவாகத் தெரிந்தும் அதை நடுவர் அறிவிக்காததால், பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.

ஒருவேளை நோபால் அறிவிக்கப்பட்டு, ப்ரீஹிட் வழங்கப்பட்டு இருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். இதை கவனித்த கேப்டன் கோலி கோபத்துடன் வந்து மைதானத்தில் வாதிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது, ரோஹித் சர்மா தனக்கு இது தெரியாது என்று வாதிட அங்கு ஒரு நாடகம் அரங்கேறியது.

20ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்து பெங்களூரு அணி 6 ரன்களில் தோல்வி அடைந்தது. டிவில்லியர்ஸ் 70 ரன்களுடனும்(41பந்துகள், 6 சிக்ஸர், 4பவுண்டரி) துபே 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x