Published : 04 Mar 2019 01:36 PM
Last Updated : 04 Mar 2019 01:36 PM
கிராஸ் ஐஸ்லெட்டில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தின் குறைந்த இலக்கை தனது காட்டடி பேட்டிங் மூலம் ஒன்றுமில்லாமல் ஊதிய மே.இ.தீவுகள் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 27 பந்துகளில் 77 ரன்களை விளாசி சிக்சர் மழை பொழிந்தார்.
ஆனால் இந்தப் போட்டியில் நடுவர்கள் தங்கள் அணிக்கு எதிராகச் செயல்பட்டதாக இங்கிலாந்து அணி உணர்கிறது.
அதாவது கிறிஸ் கெய்ல் 31 ரன்களில் இருந்த போது, கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்துக்கு முன் கூட்டியே மேலேறி வந்தார் கிறிஸ் கெய்ல், அவர் மேலேறி வருவதைப் பார்த்த கிறிஸ் வோக்ஸ், பந்தின் பிட்ச் செய்யும் அளவைக் குறைத்து கொஞ்சம் ஷார்ட்டாக வீசினார்.
பந்து தோள்பட்டை உயரம் வர கெய்ல் பந்தை ஹூக் செய்தார், ஆனால் அது ஃபைன் லெக்கில் நேராக ஆதில் ரஷீத் கையில் கேட்ச் ஆனது. இங்கிலாந்து கொண்டாடியது ஆனால் கிறிஸ் கெய்ல் போகாமல் நின்றார்.
காரணம், அது நோ-பால் என்று கெய்ல் நம்பினார். கிறிஸ் கெய்ல், ஒன்று மேலேறி வந்தார், 2வது அவர் ஷாட் ஆடும்போது சற்றே குனிந்திருந்தார், இப்போது எப்படி நோ-பால் கொடுக்க முடியும் என்பதே சர்ச்சை, ஆனால் நடுவர் உயரம் அதிகமாக எழும்பியதற்கான நோ-பால் அது என்றனர்.
இங்கிலாந்து வீரர்களும், வர்ணனையாளர்களும் வாயடைத்துப் போய்விட்டனர். பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர், இங்கிலாந்து வர்ணனையாளர்கள் ஏதோ கெய்லை அப்போது வீழ்த்தியிருந்தால் வெற்றி பெற்று விடுவது போல் பேசி வருகின்றனர்
இதனையடுத்து கிறிஸ் கெய்ல் 27 பந்துகளில் 77 விளாசினார், மார்க் உட் ஓவரில் 26 ரன்களை விளாசி அதே ஓவரில் ஆட்டமிழந்தார் கிறிஸ் கெய்ல்.
கெய்ல் தனது 51வது ஒருநாள் அரைசதத்தை 19 பந்துகளில் எடுத்தார். மேலும் 4 போட்டிகளில் 424 ரன்களை எடுத்து இங்கிலாந்து பவுலிங்கைப் பிளந்து கட்டினார். சராசரி 106, 39 சிக்சர்கள்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT