Last Updated : 20 Feb, 2019 11:35 AM

 

Published : 20 Feb 2019 11:35 AM
Last Updated : 20 Feb 2019 11:35 AM

இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்க நேரிட்டால் நாம் விளையாடவில்லை எனில் உ.கோப்பை அவர்களுக்குச் சென்று விடும்: பிசிசிஐ விளக்கம்

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி இந்திய துணை ராணுவப்படையினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டிவரும் நிலையில், அதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் பதற்றம் காரணமாக இரு நாட்டு அணிகளும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளன. இந்நிலையில், புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளும் உலகக்கோப்பையில் விளையாடுமா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள  முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிர்வாகிகளும் உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக் கூடாது புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் காரணமாக ஐசிசி அறிவித்துள்ள உலகக்கோப்பை அட்டவணையில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு எந்தவிதமான மாற்றமும் அட்டவணையில் செய்யப்படாது எனத் ஐசிசி திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இந்தசூழலில் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பிசிசிஐ வட்டாரங்கள் இன்று கூறுகையில், " உலகக் கோப்பைப் போட்டி நெருங்கி வருகிறது. இன்னும் சிறிது நாட்களுக்குப் பின் சூழல் தெளிவாகும். போட்டி அட்டவணையை மாற்றமுடியாது என ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. உலகக் கோப்பைப் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்று மத்திய அரசு விரும்பினால், நாங்கள் விளையாடமாட்டோம்.  

ஒருவேளை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நாம் விளையாடாமல் போனால், நமக்குரிய புள்ளிகளை இழக்க நேரிடும். இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள நேரிட்டு நாம் போட்டியில் பங்கேற்காமல் இருந்தால், விளையாடாமல் அவர்கள் உலகக்கோப்பையை வென்றுவிடுவார்கள் " எனத் தெரிவித்தனர்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x