Published : 15 Feb 2019 11:11 AM
Last Updated : 15 Feb 2019 11:11 AM

இது சரியான நேரம் இல்லை: புல்வாமா தாக்குதலின்போது, கிரிக்கெட் தொடர்பாக ட்வீட் செய்த கோலியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

ஜம்மு காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் கிரிக்கெட் தொடர்பாக ட்வீட் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ரசிகர்களும், நெட்டிசன்களும் கண்டித்தனர்.

ஜம்முவில் இருந்து சிறிநீகர் நோக்கி நேற்று துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து மீது, அவந்திபோரா நெடுஞ்சாலை அருகே ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.

350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை பேருந்து மீது மோடி வெடிக்கச் செய்ததில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், 38-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

45 சிஆர்பிஎப் வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி, பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அனைத்து அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். கிரிக்கெட் வீரர்கள் கம்பீர், சேவாக், முகமது கைப் போன்றவர்களும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தீவிரவாத தாக்குதல் குறித்து எந்தவிதமான கண்டன அறிக்கையும் பதிவிடாமல் அதற்குப் பதிலாக, இந்திய விளையாட்டு வீரர்களுக்கான விருது குறித்த பதிவையும், வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்கள் வாக்களிக்கக் கோரி இருந்தார்.

தேசமே மிகப்பெரிய சோகத்தில் இருக்கும்போது, இளைஞர்களுக்குக் கனவு நாயகராக இருக்கும் விராட் கோலியிடம் இருந்து இதுபோன்ற ட்விட்டரை ரசிகர்கள், நெட்டிசன்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

விராட் கோலிக்கு கடும் கண்டனம் தெரிவித்து, நெட்டிசன்கள் திட்டித் தீர்த்துவிட்டனர். ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து ட்விட் வெளியிட்டதைப் பார்த்து, சிறிது நேரத்தில், விராட் கோலி தனது ட்விட்டர் தளத்தில் இருந்து அந்த ட்விட்டை நீக்கினார்.

அந்த ட்விட்டில், " 45 சிஆர்பிஎப் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது கூடத் தெரியாமல், உங்கள் சுய பெருமைக்காக ட்வீட் செய்கிறீர்களே" என்றும், " வெட்கமாக இருக்கிறது விராட் கோலி, தயவு செய்து ட்விட்டை நீக்கிவிடுங்கள், 45 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளார்" என்று வறுத்தெடுத்தனர்.

உங்களுடைய ஸ்போர்ட்ஸ் புரோமோஷனுக்கு இது சரியானநேரம் இல்லை கோலி, ட்விட்டை நீக்குங்கள் என்று காட்டமாக நெட்டிசன்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, விராட் கோலி, தனது ட்விட்டை நீக்கிவிட்டார்.

இதையடுத்து புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து விராட் கோலி இன்று தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்துக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு என்னுடைய அனுதாபங்களையும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் " எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x