Published : 14 Feb 2019 11:58 AM
Last Updated : 14 Feb 2019 11:58 AM
இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட்டை மோசமான வார்த்தைகளால் திட்டியதற்காக, மேற்கிந்தியத்தீவுகள் வீரர் ஷானன் கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் விளையாடத் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஐசிசியின் நடத்தை விதிகளையும் மீறி செயல்பட்டுள்ளதால் கேப்ரியலுக்கு போட்டித் தடை மட்டுமல்லாமல், போட்டி ஊதியத்தில் இருந்து 75சதவீதம் அபராதமாகச் செலுத்தவும் ஐசிசி உத்தரவிட்டது.
மோசமான நடத்தைக்காக வழங்கப்படும் புள்ளிகளில் இதுவரை கேப்ரியல் 8 புள்ளிகளைக் கடந்த 24 மாதங்களில் பெற்றுள்ளார்.
இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
செயின்ட் லூசியாவில் திங்கள்கிழமை இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஜோட் ரூட்டை மே.இ.தீவுகள் வீரர் ஷானன் கேப்ரியல் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது ஐசிசி ஒழுங்கு விதி 2.13ன் கீழ் புறம்பானதாகும். ஒரு வீரர், அவரின் உதவியாளர், நடுவர், போட்டியின் மூன்றாவது நடுவர் ஆகியோரைச் சர்வதேச போட்டிகளில் தகாத வார்த்தைகளி் திட்டுவது தண்டனைக்குரியதாகும். அதன்படி, கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் விளையாடத் தடையும், போட்டி ஊதியத்தில் இருந்து 75சதவீதம் அபராதமும் விதிக்கப்படுகிறது " எனத் தெரிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட்டை தான் திட்டியதை கேப்ரியல் விசாரணையின்போது, போட்டி நடுவர் ஜெஃப் குரோவிடம் ஒப்புக்கொண்டார்.
வழக்கமாக இதுபோன்ற குற்றங்களில் வீரர் ஈடுபட்டால், 50 சதவீதம் அபராதம், 2போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்படும். ஆனால்ஸ கேப்ரியல் ஏற்கனவே மோசமான நடத்தைக்காக 5 புள்ளிகள் பெற்றிருந்தார். இப்போது 3 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுவிட்டதால், கடும் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜமைக்காவில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போதும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சிட்டஹாங்கில் நடந்த போட்டியிலும் ஒழுங்கீனமாக கேப்ரியல் நடந்ததால், புள்ளிகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT