Published : 05 Feb 2019 09:12 PM
Last Updated : 05 Feb 2019 09:12 PM

ஆஷஸ் ஆஷஸ் என்று கூறி முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்தால் உலகக்கோப்பையை வெல்வது எங்ஙணம்? - ஜஸ்டின் லாங்கர் கேள்வி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரைக் காரணம் காட்டி ஒருநாள் தொடர்களிலிருந்து முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிப்பதை ஜஸ்டின் லாங்கர் ஏற்க மறுத்துள்ளார்.

 

அடுத்த 2 மாதங்கல் ஆஸ்திரேலியாவுக்குக் கொஞ்சம் கடினமான ஷெட்யூல் காத்திருக்கிறது.  2019-ல் ஆஷஸ், உலகக்கோப்பை என்ற இரண்டு முன்னுரிமைகள் இருக்கும் போது இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் ஒருநாள் தொடர்களை ஆஸ்திரேலியா ஆட வேண்டியுள்ளது.

 

உலகக்கோப்பைக்கான இறுதி அணியை அறிவித்துத் தயார் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று உணரும் ஜஸ்டின் லாங்கர், வார்னர், ஸ்மித் இருவரும் விளையாடக்கூடிய உடற்தகுதி பெற்று விட்டால் நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இருந்தேயாக வேண்டும், ஆஷஸை மனதில் கொண்டு ஓய்வு அளித்தல் கூடாது என்று கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

 

உலகக்கோப்பை அணி என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது, அடுத்த 12 ஒருநாள் போட்டிகள் அதை முடிவு செய்வதற்கான களம். ஆகவே ஆஷஸ் தொடர் என்று கூறிக்கொண்டு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்தல் கூடாது.

 

அணிக்கு எது நல்லது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும். தனிநபர்களுக்கு எது சிறந்தது என்பதல்ல விஷயம்.

 

சில தனிப்பட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது அவர்களுக்கு நல்லதாக இருக்கும், ஆனால் நாம் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் அதை வெல்வதும் முக்கியம்தானே.

 

ஸ்மித், வார்னர் நன்றாக ஆடினால் உலகக்கோப்பைக்கு நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்கள். நாம் இந்த இரண்டு கிரேட் பிளேயர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் நல்ல வீரர்கள் பற்றி பேசவில்லை, அதாவது கிரேட் பிளேயர்கள் வேறு, நல்ல பேட்ஸ்மேன்கள் என்பது வேறு.  2 கிரேட் பிளேயர்களை ஆட வேண்டாம் என்று யார்தான் கூற முடியும்.

 

இவ்வாறு கூறினார் ஜஸ்டின் லாங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x