Published : 05 Feb 2019 05:40 PM
Last Updated : 05 Feb 2019 05:40 PM
குல்தீப் யாதவ் குறைந்த ஓவர்கள் போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் அயல்நாடுகளில் சிறப்பாக வீசுகிறார் எனவே அவர்தான் நமக்கு நம்பர் 1 ஸ்பின்னர் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அஸ்வின் இனி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு மட்டும்தான் அணியில் இருப்பார் என்று சூசகமாகக் கூறுவது போல் தெரிகிறது.
அஸ்வின் தன் உடல்காயங்களை சரியாக நிர்வகிப்பதில்லை என்பதில் தன் அதிருப்தியை ஏற்கெனவே விராட் கோலி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது ரவி சாஸ்திரியும் குல்தீப் யாதவ்வின் அருமைபெருமைகளைப் பேசியுள்ளார்.
கிரிக்பஸ் இணையதளத்துக்கு ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே குல்தீப் அயல்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் ஆடத் தொடங்கி விட்டார். 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே அவர்தான் நம் வெளிநாட்டு பிட்ச்களுக்கான முதன்மை ஸ்பின்னர். ஒரு ஸ்பின்னர்தான் தேர்வு செய்ய முடியும் சூழ்நிலையில் குல்தீப் யாதவ்வைத்தான் தேர்வு செய்வோம்.
(அஸ்வின் பற்றி கூறும்போது) அனைவருக்கும் நேரம் என்பது உண்டு. இப்போதைக்கு குல்தீப் யாதவ்தான் நம் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் குல்தீப்பை இன்னமும் கூட கணிக்க முடியாமல் திணறுகின்றனர். சிட்னி டெஸ்ட் போட்டியில் குல்தீப் வீசியது என்னை வெகுவாகக் கவர்ந்தது. இது ரிஸ்ட் ஸ்பின் யுகம். குறிப்பாக வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில், சிட்னியில் அவர் வீசிய விதம் அயல்நாடுகளில் நிச்சயம் அவர்தான் நம் நம்பர் 1 ஸ்பின்னர் என்பதைக் காட்டுகிறது.
இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT