Published : 05 Feb 2019 03:25 PM
Last Updated : 05 Feb 2019 03:25 PM
தனது உத்தியை அச்சுறுத்தும் பந்தின் பவுன்சை எதிர்கொள்ள டென்னிஸ் பந்தில் பயிற்சி பெற்று வரும் ஷிகர் தவண் முதல் டி20 போட்டி புதனன்று நடைபெறவுள்ள நிலையில் ரிஷப் பந்த் இந்திய அணியின் சொத்தாகி வருகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சமீபத்தில் ஐசிசி வளரும் விருதைப் பெற்றார் ரிஷப் பந்த். ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்ட ரிஷப் பந்த் டி20 போட்டிகளுக்கு நியூஸிலாந்துக்கு எதிராகத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் ஷிகர் தவண் கூறியதாவது:
ரிஷப் பந்த் அடித்து ஆடக்கூடிய ஆக்ரோஷ பேட்ஸ்மேன், அணிக்கு அவர் ஒரு சொத்து. எதிரணியிடமிருந்து ஆட்டத்தை குறைந்த நேரத்தில் நமக்குச் சாதகமாகத் திருப்பக் கூடியவர். டி20 கிரிக்கெட்டிலும் கிடைத்த இந்த வாய்ப்பை இருகைகளாலும் பற்றிக் கொள்வார் என்று கருதுகிறேன்.
நாங்களும் மனிதர்கள்தான். எங்கள் உடல்களுக்கும் ஓய்வு தேவை. ஆனாலும் தொடரை வெல்வதில் எந்த வித பின்னடைவும் ஏற்படாது. இந்த வெற்றியின் உத்வேகத்துடன் தான் இங்கு ஆஸ்திரேலியா வரும்போது சிறப்பாக ஆட முடியும்.
பவுன்சர்களை எதிர்கொள்வதற்காக டென்னிஸ் பந்துகளில் ஆடி பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப ஆடினால் அதை சிறப்பாக ஆட முடியும் என்று இவ்வாறு பயிற்சி எடுத்து வருகிறேன். பயிற்சியில் பந்துகளை நமக்கு த்ரோ செய்யும் போது ஒரே இடத்தில் பந்துகளை பிட்ச் செய்வது கடினம். இங்குதான் டென்னிஸ் பந்து பயிற்சி கைகொடுக்கிறது.
டென்னிஸ் பந்துகளில் ஆடிவிட்டு மீண்டும் கிரிக்கெட் பந்தில் ஆடும்போது சிலர் நம் மீது கற்களை எறிவது போன்ற உணர்வு ஏற்படும். இன்று அனைவரும் டென்னிஸ் பந்தில் பயிற்சி எடுத்து கொண்டோம், ஸ்விங்கை எதிர்கொள்வதற்கும் இது உதவும்.
பவர் பிளேயில் ஆக்ரோஷமாக ஆடுவது என்பது ஒரு மனநிலை. பிட்சைப் பொறுத்தும் அமையும். என்னிடம் நிறைய ஷாட்கள் உள்ளன பவர் பிளேயில் அது எனக்குச் சாதகமாக அமைகிறது.
உலகக்கோப்பை தருணத்தில் டி20 ஆடுவது நலமா என்றால், 5 ஒருநாள் போட்டிகள் போதும் என்பேன். முடிவில் டி20 ஆடுவது நன்றாகத்தான் உள்ளது. இதுவரை இந்தத் தொடர் சென்ற விதம் எங்களுக்கு மகிழ்ச்சியைத்தான் அளிக்கிறது.
இவ்வாறு கூறினார் ஷிகர் தவண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT