Published : 22 Jan 2019 06:45 PM
Last Updated : 22 Jan 2019 06:45 PM

மைதானத்தில் ஒருவர் இருந்தால் என்ன, 50,000 பேர் இருந்தால் என்ன?  என் வேலையை நான் செய்யப் போகிறேன்: கேலி குறித்து கோலி

விராட் கோலி மைதானத்துக்குள் இறங்கிய போதெல்லாம் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவரைக் கேலி செய்யும் விதமாக ஒலியெழுப்பி வந்தது முன்னாள், இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தி ரசிகர்களை அவர்கள் கண்டித்துள்ள சூழ்நிலையில் விராட் கோலி ரசிகர்களின் இத்தகைய நடத்தை குறித்து பதில் அளித்துள்ளார்.

 

இது குறித்து விராட் கோலி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் மத்தியக் காலக்கட்டங்களில் இது வழக்கமாக நடந்துள்ளது, இவையெல்லாம் 2014-15 ஆஸ்திரேலியத் தொடரில் ஆரம்பித்தது. அப்போது ரசிகர்கள் கேலி செய்வதற்குக் காரணமாக சில விஷயங்களை நானே அவர்களுக்கு அளித்து வந்தேன். ஏனெனில் நான் அப்போது என்னையே உத்வேகப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.  இப்போது அணியின் கேப்டனான பிறகு நான் என்னை உத்வேகப்படுத்திக் கொள்ள வேறு விஷயங்கள் தேவையில்லை.

 

இப்போது நாட்டுக்காக ஆடும் கவுரவம் என்றான பிறகு எனக்கு மிகவும் பெரிய பொறுப்பு இருக்கிறது. ரசிகர்கள் என் அணிக்குச் சார்பாகவோ, அல்லது எதிராகவோ இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் களமிறங்கி என் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும், மைதானத்தில் ஒருவர் இருந்தாலு 50,000 பேர் இருந்தாலும் நான் என் வேலையைச் செய்தாக வேண்டும்.

 

கடந்த 2-3 ஆண்டுகளாகவே இத்தகைய மனநிலைக்கு நான் வந்து விட்டேன், களத்தில் இறங்கும்போது இவை பற்றியெல்லாம் நான் யோசிப்பதேயில்லை.

 

கிரிக்கெட் ஆட நியூஸிலாந்து அருமையான ஒரு நாடு, தரமான கிரிக்கெட்டை இங்கு ரசிகர்கள் விரும்புவார்கள், நல்ல விளையாட்டு உணர்வையும், நல்ல கிரிக்கெட்டையு அவர்கள் மகிழ்வுடன் கண்டு களிப்பார்கள்.

 

 அந்த நோக்கில் நான் இங்கு இருப்பதை மகிழ்ச்சியுடன் கருதுகிறேன், ரசிகர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதோ ஒரு அணியாகவோ இது பற்றி நான் யோசிக்கவில்லை. களத்தில் இறங்கி எங்களுக்குரிய பொறுப்புகளை ஆற்ற விரும்புகிறோம்.

 

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x