Published : 22 Jan 2019 03:20 PM
Last Updated : 22 Jan 2019 03:20 PM

எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுங்கள் : உயிருக்குப் போராடும் கிரிக்கெட் வீரருக்கு ‘பிளாங்க் செக்’ மூலம் உதவிய குருணால் பாண்டியா

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் பரோடா கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்டின் குடும்பத்தாரிடம் தொகை நிரப்பப்படாத காசோலையைக் கொடுத்து, தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துக்கொள்ளக் கூறி இந்திய அணி வீரர் குருணால் பாண்டியா உதவியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பரோடாவைச் சேர்ந்தவருமான ஜேக்கப் மார்டின் கடந்த மாதம் 28-ம் தேதி கார்விபத்தில் படுகாயமடைந்தார்.

தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு மார்டின் ஜேக்கப் உயிருக்குப் போராடி வருகிறார். நாள் ஒன்றுக்கு ரூ.70 ஆயிரம் வரை சிகிச்சைக்காக தேவைப்படுகிறது.

இதையடுத்து ஜேக்கப் மார்டின் மனைவி, பிசிசிஐ நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு உதவும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பிசிசிஐ நிர்வாகம் ரூ.5 லட்சமும், பரோடா கிரிக்கெட் அமைப்பு ரூ.3 லட்சமும் அளித்துள்ளது.

ஆனால், மருத்துவச் செலவு அதிகமாகும் என்பதால் என்ன செய்வது என்று மார்டின் மனைவி தவித்து வந்தார். இந்நிலையில், ஊடகங்கள் மூலம் தனது சகவீரர் உயிருக்குப் போராடுவதை அறிந்த கங்குலி உதவி செய்ய முன்வந்தார். மேலும், இந்தச் செய்தியை ஊடகங்கள் மூலம் அறிந்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர்கள் ஜாகீர்கான், முனாப் படேல், யுசுப் பதான், இர்பான் பதான் ஆகியோர் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

ஜேக்கப் மார்ட்டினுக்கு தேவையான உதவிகளைத் திரட்டும் பணியில் பிசிசிஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் படேல் செய்து வருகிறார்.

இந்நிலையில், படேலைச் சந்தித்த இந்திய வீரர் குருணால் பாண்டியா, தொகை நிரப்பப்படாத காசோலையை அளித்து உதவியுள்ளார். ஆங்கிலநாளேடு ஒன்றுக்கு சஞ்சய் படேல் அளித்த பேட்டியில், “ என்னை நேற்று முன்தினம் சந்தித்த குருணால் பாண்டியா, மார்டினுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் தொகையை நிரப்பி எடுத்துக்கொள்ளும்படி பிளாங் செக் ஒன்றைக் கொடுத்தார். எக்காரணம் கொண்டும் பணம் ரூ. ஒரு லட்சத்துக்குக் குறைவில்லாமல் நிரப்பிக்கொள்ள வேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டு சென்றார் “ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேக்கப் மார்டின் 158 ரன்கள் சேர்த்துள்ளார். சச்சின், கங்குலி தலைமையில் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ளார். 138 முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ள ஜேக்கப் 9,192 ரன்கள் சேர்த்துள்ளார். 2000-01 ரஞ்சிக்கோப்பையை பரோடா அணிக்கு ஜேக்கப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x