Published : 15 Jan 2019 08:46 AM
Last Updated : 15 Jan 2019 08:46 AM
அடிலெய்டில் இன்று நடக்க உள்ள 2-வது ஒருநாள் போட்டியி்ல ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங்கை செய்ய தீர்மானித்துள்ளது.
இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் முதல் போட்டியில் விளையாடிய அதே அணி களமிறங்குகிறது.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் இருக்கிறது.
2-வது போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால்தான் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்பதால், முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த முதல் ஆட்டத்தில் சோபிக்காத ஷிகர் தவண், கோலி, அம்பதி ராயுடு ஆகியோர் இன்று நிலைத்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஹர்திக் பாண்டியா சஸ்பெண்ட் செய்யப்பட்டநிலையில், அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டபோதிலும் இன்றைய போட்டியில் அவர் வாய்ப்பு பெறவில்லை.
கடந்த முதல் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பெரும்பாலும் 2-வது ஆட்டத்திலும் விளையாடுகின்றனர். வேகப்பந்துவீச்சில் கலீல் அகமதுவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஒரே மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. முகமது சிராஜ் முதல்முறையாக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்துவீச்சில் புவனேஷ்குமார், முகமது ஷமி, சிராஜ் ஆகியோரும், சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகியோரும், பகுதிநேர பந்துவீச்சாளராக அம்பதி ராயுடுவும் உள்ளனர்.
ஆடுகளம் நன்கு காய்ந்திருப்பதாலும், கடும் வெயில் அடித்து வருவதாலும் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT