Published : 16 Dec 2018 12:36 PM
Last Updated : 16 Dec 2018 12:36 PM
சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று ‘உலக சாம்பியன்’ ஆனார்.
உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் இதே ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவிடம் அடைந்த தோல்விக்கு இந்த முறை சிந்து பழிதீர்த்துக்கொண்டார்.
சீனாவின் குவாங்ஜு நகரில் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டி நடந்து வந்தது. இதில் பட்டம் வெல்பவர்கள் உலகச் சாம்பியன் என அழைக்கப்படுவார்கள். மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் கடந்த ஆண்டைப் போல் இந்த முறையும் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவும் மோதினார்கள்.
ஆட்டம் தொடங்கியதில் இருந்து சிந்து பம்பரம் போல் சுழன்று, ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இதனால், முதல் செட்டில் ஜப்பான் வீராங்கனையை 3 முறை சிந்து பிரேக் செய்து, 21-16 என்ற கணக்கில் சிந்து கைப்பற்றினார்.
2-வது செட்டிலும் சிந்துவின் ஆதிக்கம் இருந்தாலும், ஒகுராவும் கடும்சவால் அளிக்கும் வகையில் விளையாடினார். சிந்து ஒரு கட்டத்தில் 14-6 என்று முன்னணியில் இருந்தார். ஆனால், ஷாட்களில் அடுத்தடுத்து செய்த தவறுகளால் ஒகுரா முன்னேற்றம் கண்டார். இதனால் இருவருக்கும் இடையிலான புள்ளி இடைவெளி குறைந்து 19-17 ஆக வந்தது. ஆனால், மனஉறுதியை கைவிடாமல் விளையாடிய சிந்து இறுதியில் 21-17 என்ற புள்ளிக்கணக்கில் ஒகுராவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதற்கு முன் ஒலிம்பிக் போட்டியிலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய சிந்து வெள்ளிப்பதக்கம் மட்டுமே வென்றிருந்தார். தங்கத்தை வெல்ல முடியவில்லை. ஆனால், முதல்முறையாக வென்றுள்ளார். மேலும், இந்த ஆண்டு 8 போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சிந்து முன்னேறியும் அதில் இரண்டில் மட்டுமே பட்டம் வென்றிருந்தார். இப்போது இந்த போட்டியில் சிந்து வென்ற பட்டம் அவருக்கு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT