Published : 16 Dec 2018 10:14 AM
Last Updated : 16 Dec 2018 10:14 AM

சர்ச்சைக்குரிய அவுட்; அதிருப்தியுடன் வெளியேறிய விராட் கோலி

பெர்த்தில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டதால், அவர் மைதானத்திலிருந்து அதிருப்தியுடன் வெளியேறினார்.

பெர்த்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் விராட் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே லயன் பந்துவிச்சீல் விக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ரஹானே 51 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஹனுமா விஹாரி களமிறங்கி, கோலியுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினார் கோலி அபாரமாக ஆடி 25-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.

நிதானமாக ஆடிய ஹனுமா விஹாரி 20 ரன்களில் வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ரிஷப் பந்தும் விளையாடி வந்தனர்.

92-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசிப் பந்து விராட் கோலியின் பேட்டில் பட்டு சென்றது, பந்தை 2-வது ஸ்லிப்பில் நின்றுஇருந்த ஹேட்ஸ்கம்ப் பிடித்தார். இதற்கு களநடுவர் அவுட் அளித்தார். ஆனால், இந்த கேட்ச் பிடித்ததில் சந்தேகம் இருந்ததைத் தொடர்ந்து மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்யப்பட்டது.

மூன்றாவது நடுவர் டி.வி. ரீப்ளேயில் விராட் கோலியின் பேட்டில் பட்டு சென்ற பந்தையும், ஹேண்ட்ஸ்கம்ப் பிடித்ததையும் ஆய்வு செய்தனர். ரீப்ளே காட்சியில் பந்து தரையில்பட்டபின்புதான் ஹேன்ட்ஸ்கம்ப் பிடித்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

மேலும், ரீப்ளேயும் ஜும் செய்தும், மூன்றாவது நடுவர்கள் பார்த்தனர். அப்போது, பந்து தரையில் பட்டபின்புதான் ஹேன்ட்ஸ்கம்ப் பந்தை பிடித்தார் என்பது தெளிவாக அறியமுடிந்தது. இதனால், சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்குச் செல்லும் என்பதால் கோலிக்கு அவுட் அளிக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், அவுட் அளித்து மூன்றாவது நடுவர் அறிவித்ததால், விராட் கோலி ஏமாற்றமடைந்து, மிகுந்த அதிருப்தியுடனும், கோபத்துடனும் வெளியேறினார். ரசிகர்களும் உரத்த குரலில் கோஷமிட்டு தங்களின் ஏமாற்றத்தைப் பதிவு செய்தனர்.

விராட்கோலி 123 ரன்களில்(257பந்து) ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் ஒரு சிக்ஸர்,13 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த ஷமி களமிறங்கினார். லயன் பந்துவீச்சில் வந்தவேகத்தில் டக்அவுட்டில் ஷமி ஆட்டமிழந்தார்.

மதிய உணவு நேர இடைவேளையின் போது, இந்திய அணி 93.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்திருந்தது. ரிஷப் பந்த் 14 ரன்களில் களத்தில் உள்ளார். இன்னும் ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் 74 ரன்கள் பின்தங்கி உள்ளது இந்திய அணி .

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x