Published : 14 Dec 2018 05:29 PM
Last Updated : 14 Dec 2018 05:29 PM

முதல் செஷனில் சரியாக வீசாத இந்திய அணி பிறகு பிட்சைப் புரிந்து கொண்டு வீசியது ஆனாலும் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

பெர்த் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பிட்ச் பற்றிய புரிதலற்ற பந்து வீச்சைப் பயன்படுத்தி தொடக்க ஜோடியின் சதக்கூட்டணியுடன் முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் செஷனில் சரியாக வீசாத இந்திய அணி அதன் பிறகு புரிதலுடன் வீசியது.சொதப்பலான பந்து வீச்சு; விக்கெட் வீழ்த்தத் திணறல்: மார்கஸ் ஹாரிஸ், ஏரோன் பிஞ்ச் வலுவான தொடக்கம்

 

அதுவும் உணவு இடைவேளைக்குப் பிறகு எதிர்பார்த்தது போலவே கடும் வெயிலில் பிட்ச் வேகமடைந்தது, குட் லெந்த்திலிருந்தே பந்துகள் எகிறத் தொடங்கின. ஆனால் அதிலும் ஹனுமா விஹாரி என்ற பகுதி நேர ஸ்பின்னர்தான் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், வேகப்பந்து வீச்சாளர்கள் அல்ல. உண்மையில் முதல் செஷனில் வேகம் கூட்டி நெருக்கமாக பீல்ட் அமைத்திருந்தால் சதக்கூட்டணி அமைந்திருக்காது என்பதே நிதர்சனம்.

 

பிட்ச் அறிக்கையில் இது 250 ரன்கள் பிட்ச் என்றனர், ஆனால் ஆஸ்திரேலியா எப்படியும் 300 ரன்களைக் கடந்து விடும். மேலும் உணவு இடைவேளைக்கு முன்பாக எந்த ஒரு கூடுதல் முயற்சியின்றி பிட்ச் பார்த்துக் கொள்ளும் என்று வேகம் குறைவாக வீசியது இந்தியப் பந்து வீச்சுக் கூட்டணி, இஷாந்த் சர்மா 130 கிமீ வேகம்தான் தொட்டார், உணவு இடைவேளைக்கு முன்னதாக பும்ரா கூட 132-135 கிமீ வேகத்தில்தான் வீசினார், குறிப்பாக இஷாந்த் சர்மா நோ-பால் அச்சத்தில் சரியாக வீசவில்லை, இடது கை பேட்ஸ்மெனுக்கு ஓவர் த விக்கெட் வீசுவதையே சமீபமாக கைவிட்ட (யாருடைய யோசனையோ இது!) இஷாந்த் இன்று ஓவர் த விக்கெட்டில் சொதப்பு சொதப்பென்று சொதப்பினார்.  ஷமி மட்டுமே உணவு இடைவேளைக்கு முன்னதாக சிறப்பாக வீசி ஏரோன் பிஞ்ச் மனதில் ஐயத்தை தன் இன்ஸ்விங் பவுலிங் மூலம் ஏற்படுத்தினார்.

 

 

உமேஷ் யாதவ் உணவு இடைவேளைக்குப் பிறகு பிட்ச் எகிறத் தொடங்கியவுடன் நன்றாக வீசினார். ஆனால் ஆஸ்திரேலிய அணியில் கவாஜாவைத் தவிர மற்ற விக்கெட்டுகள் தவறான ஷாட் தேர்வினால் விளைந்ததே தவிர பவுலிங் முயற்சியால் அல்ல. ஆனால் இந்திய பவுலர்கள் மட்டையைப் பந்து கடந்து செல்வதையே, பீட்டன் செய்வதையே பெரிய சாதனையாகக் கருதினர், விக்கெட் என்பதுதான் முக்கியம். இவ்விதத்தில் ஹனுமா விஹாரி ரன்களை வழங்கினாலும் மார்கஸ் ஹாரிஸ், அபாய ஷான் மார்ஷ் ஆகியோரை வீழ்த்தினார்.

 

மார்கஸ் ஹாரிஸ், ஏரோன் பிஞ்ச் 66/0 என்ற நிலையிலிருந்து உணவு இடைவேளைக்குப் பிறகு கோலியின் புரிதலற்ற களவியூகத்தினால் மேலும் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் சேர்ந்து 112 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஏரோன் பிஞ்ச் 6 பவுண்டரிகளுடன் 105 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் பிட்ச் எகிறு பிட்ச்சாக சூடுபிடிக்க, பும்ரா தன் வேகத்தைக் கூட்டினார் 132-135 என்று வீசிய அவர் 140-145 கிமீ வேகம் வீசி பிஞ்சை பின்னால் தள்ளி பிறகு ஒரு முழுவேக இன்ஸ்விங்கரில் அவரைச் சிக்க வைத்தார்.  மார்கஸ் ஹாரிஸ் தனது டைட் டெக்னிக்கைத் தொடர்ந்து பிறகு தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பத் தொடங்கினார். அவர் 10 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் பகுதி நேர ஸ்பின்னர் ஹனுமா விஹாரி ஒரு பந்தை ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீச பந்து அவருக்கே எகிறியது அதிர்ந்து போன ஹாரிஸ் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாற பந்து கிளவ்வில் பட்டு ஸ்லிப்பில் ரஹானேவிடம் கேட்ச் ஆனது.

 

முன்னதாக கவாஜா இந்திய வேகப்பந்து வீச்சின் உச்சத்திலும் தீவிரத்திலும் சிக்கினார், பும்ரா, ஷமி, யாதவ் அவரைப் படுத்தி எடுத்தனர். 38 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த அவர் சிலபல தொடர் மெய்டன்களினால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட கடைசியில் உமேஷ் யாதவ்வின் கூடுதலாக எழும்பிய ஷார்ட் பிட்ச் பந்தை கட் ஆட முயன்று கவாஜா ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கவாஜாவைக் கட்டுப்படுத்தியதில் எதிர்முனையில் ஹாரிஸுக்கும் ஸ்ட்ரைக் கிடைப்பதில் சிக்கலானது.

 

ஹனுமா விஹாரியின் முதல் 2 பந்துகள் பவுண்டரிக்குப் பறந்தன, ஆனால் ஹாரிசுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் ஹனுமா வீசிய பந்து மார்புயரம் எழுந்தது இந்திய அணிக்கு இந்தப்  பிட்சில் என்ன காத்திருக்கிறது என்பதை அறிவுறுத்தியது.  ஹேண்ட்ஸ்கம்ப் 7 ரன்களில் இஷாந்த் சர்மாவின் உடலுக்கு நெருக்கமாக வந்த எகிறு பந்தை தவறாகக் கட் செய்ய முயன்றார் பந்து மட்டையில் பட்டு ஸ்லிப் திசையில் எகிறியது. கோலிக்கு வலது புறம் உயரமாக எழும்பியது. ஆனால் கோலி எழும்பி அந்தரத்தில் கையை நீட்டி, உயர்த்தி அற்புதமான கேட்சைப் பிடிக்க ஆஸ்திரேலியா தொடக்கக் கூட்டணியின் 112/0 என்ற சாதகத்தை இழந்து 148/4 என்று ஆனது.

 

ட்ராவிஸ் ஹெட் வந்து நின்றவுடனேயே இஷாந்த் சர்மாவின் பவுன்சர் ஒன்று அவரை கபளீகரம் செய்திருக்கும் ஆனால் எட்ஜ் ஆகி உயரே பறந்து பவுண்டரி ஆனது. ஹெட், மார்ஷ் கடும் வேகப்பந்து சோதனைகளைக் கடந்து செட்டில் ஆகினர், பீட்டன்களுடன் அவர்கள் பவுண்டரிகளையும் அடித்து 84 மிகமுக்கிய ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். மார்ஷ் 45 ரன்களை சேர்த்த நிலையில் ஹனுமா விஹாரியின் வைடு ஆஃப் பிரேக்கை விரட்டி எட்ஜ் செய்தார், ரஹானேவும் ஒரு அற்புதமான கேட்சை எடுத்தார். ட்ராவிஸ் ஹெட் அடிலெய்டில் பிரமாதமான 72 ரன்களை எடுத்தவர்.  இன்று மேலும் ஒரு அரைசதம் எடுத்து 58 ரன்களில் 6 பவுண்டரிகளுடன் ஆடிவந்த நிலையில் 2வது புதிய பந்தில் இஷாந்த்தின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தின் மீது மட்டையை வீசினார் பந்து தேர்ட்மேனுக்குப் பறந்தது அங்கே ஷமி கேட்ச் எடுத்தார்.

 

ஆட்ட முடிவில் டிம் பெய்ன் 16 ரன்களுடன், கமின்ஸ் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. 277/6. பிட்ச்சில் குட்லெந்த் பந்துகளும் எகிறுவதைப் பார்த்தால் இந்திய பேட்டிங் வரிசைக்குக் கஷ்ட காலம் காத்திருக்கிறது என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x