Published : 18 Oct 2018 03:45 PM
Last Updated : 18 Oct 2018 03:45 PM

காமெடி ரன் அவுட்: பவுண்டரி என நினைத்து ஆடுகளத்துக்கு நடுவில் நின்று பேசிய பாக். வீரருக்கு ஆஸி வீரர்கள் அளித்த அதிர்ச்சி

அபுதாபியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அசார் அலி பவுண்டரி அடித்துவிட்டதாக நினைத்து ஆடுகளத்தில் நடுவில் பந்து சகவீரருடன் பேசியபோது ரன் அவுட் ஆகிய கொடுமை நடந்துள்ளது.

அபுதாபியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 282 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 145 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் 137 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி விளையாடத் தொடங்கியது. 3-வது நாள் ஆட்டமான இன்று 4-வது விக்கெட்டுக்கு அசார் அலி 64 ரன்களுடனும், அசாத் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அப்போது, ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில் பந்துவீசினார். பீட்டர் சிடில் வீசிய பந்தை அசார் அலி சிலிப் திசையில் அடித்துவிட அது தேர்டு மேன்திசையில் பவுண்டரிக்கு நோக்கி வேகமாகச் சென்றது.இதைப் பார்த்த அசார் அலி பந்து பவுண்டரிக்கு செல்கிறது என நினைத்து ரன் எடுக்காமல் நிதானமாக நடந்து ஆடுகளத்தின் நடுப்பகுதிக்கு வந்தார்.

எதிர்தரப்பில் இருந்த ஆசாத்தும் வந்து இருவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், பவுண்டரியை நோக்கி வேகமாகச் சென்றபந்து பவுண்டரியை தொடாமல் நின்றுவிட்டது, இதைப்பார்த்த மிட்ஷெல் ஸ்டார்க் பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் பைனேயிடம் வீசி எறிந்தார். அவர் பந்தைப் பிடித்து அசார் அலியை ரன் அவுட் செய்தார்.

ஆனால் அசார் அலிக்கோ ஏன் விக்கெட் கீப்பர் பைனே ரன்அவுட் செய்தார் என்று தெரியாமல் திருதிரு என விழித்துக்கொண்டிருந்தார். அதன்பின் நடுவர் நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறியதும் தலையில் அடித்துக்கொண்டு அசார் அலி வெளியேறினார்.

இந்த சம்பவத்தைப் பார்த்துஆஸ்திரேலிய வீரர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் சிரித்துவிட்டனர். இந்த வீடியோவை ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து கிண்டலடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x