Published : 05 Oct 2018 07:11 PM
Last Updated : 05 Oct 2018 07:11 PM

பரிதாபம்: 6 விக். இழப்பு, 555 ரன்கள் பின்னிலை: மிகப்பெரிய தோல்வியை நோக்கி மே.இ.தீவுகள்

40 டிகிரி வெயிலில் சுமார் 150 ஓவர்கள் களத்தில் காய்ந்து விட்டு பேட் செய்ய வந்த மே.இ.தீவுகள் அணி துல்லியத் தாக்குதல் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

களத்தில் ஓரளவுக்கு டெய்ல் எண்டர்களுடன் நிலைத்து ஆடும் ராஸ்டன் சேஸ் 27 ரன்களுடனும் கீமோ பால் 13 ரன்களுடனும் உள்ளனர். தொடக்க வீரர்களை ஷமி காலி செய்ய பிறகு அஸ்வின், ஜடேஜா, குல்தீப் தலா 1 விக்கெட்டைப் பகிர்ந்து கொண்டனர்.

இன்றைய நாள் ரவீந்திர ஜடேஜாவுக்குச் சொந்தமானது, தன் சொந்த மண்ணிலேயே தனது முதல் சதம், ஒரு விக்கெட், ஒரு ரன் அவுட் என்று இன்று ஆல்ரவுண்ட் அசத்தல் மேற்கொண்டார் ஜடேஜா. ரிஷப் பந்த் முதலில் அடித்து ஆடத்தொடங்கினார், பின் வேறு எப்படி இந்தப் பந்து வீச்சை ஆடுவதாம்? என்று கேட்பது போல் பிறகு ஜடேஜா ஆடினார். விராட் கோலி 24 டெஸ்ட் சதங்களுடன் அதிக சதப்பட்டியலில் இந்திய வரிசையில் 4ம் இடத்தில் உள்ளார், சேவாகைக் கடந்தார். மேலும் 3ம் ஆண்டாக தொடர்ச்சியாக 1000 ரன்களைக் கடந்தார். இந்தியா 649 ரன்கள் குவித்தது.

மே.இ.தீவுகள் கேப்டன் தன் களவியூகத்தினால் மேற்கூறியவற்றை இந்திய அணியினர் சாதிக்க அனுமதித்தார், அல்லது இந்திய அணியினர் 40 டிகிரி வெயிலிலும் வேர்வை சிந்தாமல் பெரிய ரன் எண்ணிக்கையை எட்ட முடிந்தது.

பிறகு நல்ல பவுலிங், படுமோசமான பேட்டிங், கடும் நகைச்சுவையான ரன் அவுட் என்று எவ்வளவு மோசமாக ஆட முடியுமோ அவ்வளவு மோசமாக ஆடி மே.இ.தீவுகள் 94/6 என்று 555 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இது போன்ற தொடரை ஆஸ்திரேலியாவுக்கு முன்னோட்டம் என்றால் சிரிப்புதான் வருகிறது. முதலில் நல்ல கிரீன் டாப் பிட்சைப் போட்டு கிமார் ரோச், உள்ளிட்டோரை ஆடியிருந்தால் புதிய வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோருக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் ஏன் புஜாரா, கோலிக்குமே பயனுள்ளதாக இருந்திருக்கும். இது டிபிகல் டாஸ் வென்று முதலில் பேட் செய்து எதிரணியை நொறுக்கும் இந்தியப் பிட்ச்.

அதுதான் நடந்தது. மே.இ.தீவுகள் இறங்கிய போது குறிக்கோள் இல்லாத பேட்டிங், ஷமியின் அருமையான பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் காலியாகினர். பிறகு அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மென் ஷேய் ஹோப் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். ஆஃப் பிரேக் போல் அவரை மயங்க வைத்து பந்தைத் திருப்பவேயில்லை பவுல்டு ஆனார் ஷேய் ஹோப். சுனில் அம்ப்ரிஸ் இறங்கி அஸ்வினை அதே ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார்.

ஆனால் ஹெட்மையரும் அம்ப்ரிசும் ஒரு காமெடி ரன் அவுட் என்பதை விட பரிதாப ரன் அவுட்டில் கூட்டிணைய ஹெட்மையர் ரன் அவுட் ஆனார். இருவரும் ஒரே முனையில். ஜடேஜா ரன் அவுட் செய்தார். அம்ப்ரிஸ் 12 ரன்களில் தேவையில்லாத ஷாட் ஆடி ஜடேஜா பந்தை ஸ்லிப்பில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்தார். ஷேன் டவ்ரிச் 10 ரன்களில் குல்தீப் வலையில் சிக்கி உள்ளே வந்த பந்தில் பவுல்டு ஆனார். இந்தியா பாலோ ஆன் தான் கொடுக்க வேண்டும், மீண்டும் பேட் செய்தால் அது அசிங்கம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x