Last Updated : 29 Sep, 2018 02:33 PM

 

Published : 29 Sep 2018 02:33 PM
Last Updated : 29 Sep 2018 02:33 PM

‘நான் தோனி மாதிரி’: சிலிர்க்க வைத்த ரோஹித் சர்மா

நான் களத்தில் இறங்கிவிட்டால் தோனி மாதிரி, எப்போதும் டென்ஷன் இல்லாமல்தான் இருப்பேன் என்று ரோஹிர் சர்மா பெருமையுடன் கூறியுள்ளார்.

துபாயில் நடந்த ஆசியக்கோப்பைப் போட்டி இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியைக் கடைசி பந்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்த வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம், அனைத்துப் போட்டிகளிலும் பதற்றம் இல்லாமல் மிகவும் கூலாக கேப்டன்ஷிப் செய்தமைக்கு என்ன காரணம் என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியதாவது:

''நான் தோனி மாதிரி. களத்துக்கு வந்துவிட்டால் ரொம்ப கூலாக கேப்டன்ஷிப் செய்வேன். எல்லாம் தோனியிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.

அவருடன் இத்தனை ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். தோனி ஒருமுறை கூட கேப்டன்ஷிப் செய்யும் போது பதற்றத்தை முகத்தில் காட்டியதே இல்லை. பதற்றமான முடிவுகளை எடுத்ததே இல்லை. மிகவும் கூலாகத்தான் இருப்பார். அவரைப் பார்த்துதான் நானும் கேப்டன் பணியைச் செய்தேன். அவரின் கேப்டன்ஷிப் பண்புகள் என்னிடமும் இருக்கும் என நம்புகிறேன்.

 

நான் களத்தில் வந்தபின் எந்த முடிவு எடுக்கும் முன் முதலில் சிந்திப்பேன். அதன்பின் முடிவைச் செயலில் காட்டுவேன். அதிலும் 50 ஓவர்கள் போட்டி எனும் போது, நமக்கு முடிவு எடுக்க அதிக நேரம் இருக்கிறது. இதுபோன்ற நுணுக்கங்களை எல்லாம் தோனியைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன். நான் அவரின் தலைமையின்கீழ் ஏராளமான போட்டிகள் விளையாடி இருக்கிறேன். ஏதாவது ஒரு சின்ன பிரச்சினை என்றாலும், குழப்பம் ஏற்பட்டாலும், உடனடியாக என்னிடம் வந்து ஆலோசனைகளை வழங்கிவிட்டுச் செல்வார்.

தோனியிடம் இருந்து ஒவ்வொரு முறையும் ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கிறோம். ஏனென்றால், அந்த அளவுக்குச் சிறந்த கேப்டனாக இருந்திருக்கிறார். களத்தில் கேப்டன்ஷிப்பில் எப்போதெல்லாம் சந்தேகம் வருகிறதோ அப்போதெல்லாம் பதில் அளிக்க தோனி தயாராக இருப்பார்''.

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x