Published : 26 Sep 2018 06:00 PM
Last Updated : 26 Sep 2018 06:00 PM

கேப்டன் தோனியோடு சேர்த்து விளையாடும் லெவனையும் தேர்வு செய்தது யார்? ரவிசாஸ்திரியா? ரோஹித் சர்மாவா? சாஸ்திரியை விளாசும் கங்குலி

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 போட்டியில் ஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியை கேப்டனாக்கியது சரியான ஒரு விஷயமாக இருக்கலாம், ஆனால் கேப்டன் அவர் என்றால், அவர்தானே அணியைத் தீர்மானிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேப்டனோடு சேர்த்து விளையாடும் லெவனையும் தேர்வு செய்தது யார்? என்ற கேள்வி உண்மையில் எழுகிறது, கேப்டன் தோனி என்றால் அவர்தானே விளையாடும் லெவனையும் தேர்வு செய்ய வேண்டும்?

நேற்றைய ஆட்டத்தின் முடிவில் தோனி கூறும்போது, “நாங்கள் தொடக்கத்திலேயே கையுடைந்த நிலையில் இறங்கினோம், முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது” என்று கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஷிகர் தவண், ரோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோரை உட்கார வைத்து விட்டு மற்ற வீர்ர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, வாய்ப்பளித்தது சரிதான், ஆனால் நம் கேள்வி கேப்டன் என்று தோனியை அறிவித்த பிறகு அணித்தேர்வு அவர் விருப்பத்துக்கு விடப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்பதுதான்.

இதனால் என்ன ஆனது டாட்பால்களை அதிகம் விடும் ஷஸாத் நம் பவுலர்களைப் புரட்டி எடுத்து அதிரடி சதம் கண்டார், அதிலும் குறிப்பாக ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில் ஆடும் அவர் லெக் திசையில் தனது 45% ரன்களை எடுத்துள்ளது ரன் மேப்பில் காட்டப்பட்டது. அனுபவமற்ற இந்தியப் பந்து வீச்சு அந்த அளவுக்கு அல்வாவானது அவருக்கு. பிறகு 110/0 என்ற நிலையிலிருந்து மிடில் ஆர்டருக்கு மேட்ச் பிராக்டீஸ் இல்லாததால் சொதப்பி 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஆட்டம் டை ஆனது. ஆப்கான் அணியின் அயராத உழைப்பைப் பாராட்டுவோம், ஆனாலும் கேப்டனாக்கிய ஒருவருக்கு அணியைத் தேர்வு செய்யும் உரிமையில்லையா? என்பதே நம் கேள்வி.

சவுரவ் கங்குலியும் இதே கேள்வியை எழுப்பியபோது, “யார் அணியைத் தேர்வு செய்கிறார்கள் ரோஹித் சர்மாவா, ரவிசாஸ்திரியா? கால்பந்துதான் பயிற்சியாளர்களின் உத்திகளுக்கான ஆட்டம், ஆனால் கிரிக்கெட் கேப்டன்களின் ஆட்டமாகும். பயிற்சியாளர் பின் இருக்கையில் அமர வேண்டியதுதான்.

இப்போதைய கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கால்பந்து அணியைப் போல் கிரிக்கெட்டை நடத்த விரும்புகின்றனர். ஆனால் கிரிக்கெட் கேப்டன்களின் ஆட்டம். பயிற்சியாளர் பின்னால் இருந்து பயிற்சியளிக்கலாம் அவ்வளவே” என்று ரவிசாஸ்திரியை விமர்சித்ததோடு, தன் கரியரில் தான் பெற்ற சிறந்த அறிவுரை எது என்று கேட்டதற்கு, “பயிற்சியாளரைத் தேர்வு செய்யாதே” என்ற அறிவுரைதான் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x