Published : 09 Sep 2018 12:04 PM
Last Updated : 09 Sep 2018 12:04 PM

விக்கெட் விழவில்லை, மட்டைவிளிம்பைக் கடந்து பந்துகள்.. வெறுப்பில் ஷமி..: கோலியிடம் ரஹானே கூறியது என்ன?

ஓவல் டெஸ்ட் போட்டியில் 181/7 என்ற நிலையிலிருந்து இங்கிலாந்து அணி பட்லர் (89), பிராட் ஆகியோரது அபார பேட்டிங்கினாலும் கோலியின் களவியூக உதவியினாலும் 332 ரன்களுக்கு உயர்ந்தது.

பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கும் போது 3 ஸ்லிப் ஒரு கல்லி, அல்லது 4 ஸ்லிப் என்று நிறுத்தி சிங்கிள்களை கட் செய்து, களவியூகத்தில் இடைவெளியைக் கொடுக்காமல் அமைத்திருந்தால் பதற்றத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்து பட்லரோ, பிராடோ அவுட் ஆகியிருப்பார்கள், ஆனால் பிராட் களத்தில் வந்தவுடனேயே பட்லர் அடித்து ஆடப்போகிறார் என்று கோலி அதீதக் கற்பனையில் 2 ஸ்லிப்புகளாக்கி டீப் பைன் லெக், ஸ்கொயர் லெக், டீப் கவர் என்று பீல்டை மாற்ற அவர்கள் இருவரும் சவுகரியமாக ரன்களை எடுத்து ஸ்ட்ரைக்கை சுழற்சியில் விட்டனர். ஷமியின் பந்துகள் குறைந்தது இந்த டெஸ்ட்டில் 50 முறையாவது மட்டையைக் கடந்து சென்றிருக்கும், ஆனால் கோலியின் பீல்டிங் செட்-அப் உதவவில்லை.

இந்நிலையில் கோலி வெறுப்படைய இந்திய வீரர்கள் உடல் மொழியில் எதிர்மறைத்தன்மை அதிகரித்தது, அப்போது அஜிங்கிய ரஹானே கோலியிடம் சென்று சில ஆலோசனைகளை வழங்கினார். அதாவது பட்லருக்கு பந்தை பிட்ச் செய்து வெளியே ஸ்விங் செய்யுமாறு ரஹானே தனது ஆலோசனையைக் கோலியிடம் கூறினார்.

ராகுல் இதனை ஷமிக்குத் தெரியப்படுத்தினார். பிராட் பேட் செய்யும் போது அவர் ஷாட்கள் ஆட இடம் கொடுக்க வேண்டாம் என்றும் ரஹானே அறிவுறுத்தினார். ஆனால் கோலி பேசாமல்தான் இருந்தார்.

பிராட் ஷார்ட் பிட்ச் பந்துகளில் பலவீனமானவர், ஒருமுறை வருண் ஆரோன் பந்தில் அடிவாங்கியது தன் பேட்டிங்கை எப்படி காலி செய்தது என்று பேட்டியெல்லாம் கொடுத்தார், ஆனால் நம் கேப்டனுக்கு அதெல்லாம் தெரியவில்லை, ஒரு முறை கூட பிராடுக்கு ஷார்ட் பிட்ச் முயற்சி செய்யுங்கள் என்று ஒரு கேப்டனாக கோலி பவுலர்களுக்கு அறிவுறுத்தவே இல்லை.

சூழ்நிலை கையை மீறிச் செல்லும் போது இந்திய ஓய்வறையிலும் இது உணரப்பட்டது. அப்போதுதான் உணவு இடைவேளைக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் மைதானத்துக்குள் வந்து என்ன செய்ய வேண்டும் என்ற பயிற்சியாளர்களின் ஆலோசனைகளைச் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் இஷாந்த் சர்மாவை பந்து வீச அழைத்தார் கோலி.

எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் பவுலர்களிடமே தெரிவுகள் விடப்படுவதால் அவர்கள் குழம்பினர், இதனால்தான் பிராடை ஷார்ட் பிட்ச் வீசி தாக்குவதற்குப் பதிலாக பும்ரா வெறுப்பில் பட்லரிடம் இதை முயன்று வாங்கிக்கட்டிக்கொண்டார், இரண்டு சிக்சர்கள் பறந்தன. பும்ரா தன் வெறுப்பை வெளிப்படையாகக் காட்டினார்.

கோலி நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது இந்தத் தொடரில் கிரிக்கெட் பண்டிதர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x