Published : 02 Sep 2018 04:24 PM
Last Updated : 02 Sep 2018 04:24 PM

இந்திய அணிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்கு : தொடக்கமே அதிர்ச்சி

சவுத்தாம்டனில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி கூடுதலாக 5 ஓவர்கள் மட்டுமே களத்தில் இருந்த நிலையில் மீதமிருந்த 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 271 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வென்று 2-1 என்ற நிலையில் உள்ளன.

சவுத்தாம்டனில் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களுக்கும், இந்திய அணி 273 ரன்களுக்கும் ஆட்டமிழந்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது. சாம்கரன் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 3-வது நாளான நேற்று 91.5 ஓவரை ஷமி வீசும் போது ஆட்டம் நிறுத்தப்பட்டதால், மீதியிருந்த ஒரு பந்தை வீச ஷமி ஆயத்தமானார். சாம் கரன், பிராட் களமிறங்கினார்.

முகமது ஷமி வீசிய அந்தப் பந்தை பிராட் எதிர்கொண்டார். காலைக் குளிர், ஈரப்பதம், புதிய பந்து காரணமாகப் பந்து பிராடின் பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரின் கைகளில் சென்றது. இதனால் பிராட் டக்அவுட்டில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஆன்டர்சன், கரனுடன் இணைந்தார். அஸ்வின், ஷமி பந்துவீச்சில் இரு பவுண்டரிகளை சாம் கரன் அடித்தார். அஸ்வின் வீசிய 97-வது ஓவரின் முதல் பந்தை சாம் கரன் அடித்துவிட்டு ஓட முயன்றார். ஆனால், இசாந்த் சர்மா தடுத்து வீக்கெட் கீப்பரிடம் எறியவே ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், சாம் கரன் 46 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்திய அணி வெற்றி பெற 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷிகர் தவண், கே.எல் ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். கிறிஸ் பிராட் வீசிய 4-வது ஓவரில் கே.எல். ராகுல் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதனால், இந்திய அணி 5 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x