Published : 01 Sep 2018 02:42 PM
Last Updated : 01 Sep 2018 02:42 PM

கோலிக்கு ஓய்வு; ரோஹித் கேப்டன்: ராஜஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமட் அணியில்

செப்டம்பர் 15 முதல் 28ம் தேதி வரை யுஏஇ-யில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவண் அணியின் துணைக் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

செப்டம்பர் 11ம் தேதி நடப்பு இங்கிலாந்து தொடர் முடிவுக்கு வருகிறது, அதிலிருந்து ஆசியக் கோப்பைக்கு 4 நாட்களே உள்ள நிலையில் ஆசிய கோப்பை முடிந்தவுடன் ஒரு வாரத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக ராஜ்கோட்டில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது, தொடர்ந்து இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவிருப்பதால் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிப்பது முறையே. மேலும் மே.இ.தீவுகள் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி கடினமான ஆஸ்திரேலியா தொடருக்குச் செல்கிறது.

ஆனால் ஷிகர் தவண், ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கவில்லை.

இந்த அணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமட் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 2 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஆனால் லிஸ்ட் ஏ மற்றும் டி20-யில் இவர் கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவர். இவற்றில் 29 போட்டிகளில் ஆடியுள்ளார். இங்கிலாந்து சென்ற இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருந்தார், சமீபத்தில் முடிந்த லிஸ்ட் ஏ நான்கு அணிகள் பங்கேற்ற தொடரில் இந்தியா ஏ அணியில் ஆடினார் கலீல் அகமட்.

நடுவரிசை வீரர்களான அம்பாத்தி ராயுடி, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கவில்லை, அதே போல் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் ஆகியோரும் இல்லை.

இந்திய அணி வருமாறு:

ரோஹித் சர்மா (கேப்டன்). ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ராயுடு, பாண்டே, கேதார் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், அக்சர் படேல், ஷர்துல் தாக்குர், கலீல் அகமட், ஹர்திக் பாண்டியா, பும்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x