Published : 30 Aug 2018 03:41 PM
Last Updated : 30 Aug 2018 03:41 PM

4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்றது: இந்திய அணியில் மாற்றமா?

 சவுத்தாம்டன் நகரில் இன்று தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது.

டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில்முன்னிலையில் இருந்தது. நாட்டிங்ஹாமில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின்அபார சதம், அஸ்வின், பும்ரா, ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சால் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், சவுத்தாம்டன் நகரில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோய் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் இருமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக வோக்ஸ்கு பதிலாக சாம் குரன் சேர்க்கப்பட்டுள்ளார். அணிக்கு மொயின் அலி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் காரணமாக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், நேற்றைய பயிற்சியில் அஸ்வின் பந்து வீசினார். அப்போது பேட்டி அளித்த விராட் கோலி, அஸ்வின் முழுத்தகுதியுடன் உள்ளார் எனத் தெரிவித்தார். இளம் வீரர்கள் பிரித்திவி ஷா, ஹனுமா விஹாரி ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. ஆனால், 3-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்கள் எந்த மாற்றமுமில்லாமல் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர்.

இந்திய அணி வீரர்கள் விவரம்: கே.எல் ராகுல், தவண், புஜாரா, விராட் கோலி, ரஹானே, பாண்டியா, ரிஷாப்பந்த், அஸ்வின், முகமது ஷமி, இசாந்த் சர்மா, பும்ரா

இங்கிலாந்து அணி விவரம்: அலிஸ்டார் குக், ஜென்னிங்ஸ், ஜோய்ரூட், பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், பென்ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் குரன், அதில் ராஷித், கிறிஸ் பிராட், ஆன்டர்ஸன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x